“பொறுமையாக ஆடும் ஆட்டம் நமக்கு செட் ஆகாது போல, நமக்கு எப்போதுமே சிக்ஸர் மட்டும்தான்!” என்பதைப் போல தனது பழைய ஃபார்முக்கு திரும்பி, இலங்கை பந்து வீச்சாளர்களை பந்தாடினார், இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ஐபிஎல் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி, மிகக் குறைந்த வயதில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இந்திய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், இந்த தொடரில் பெரிய இன்னிங்ஸ் எதையும் ஆடாமல் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்திருந்தார்.
ஒருநாள் போட்டிகளில் பொறுமையாக விளையாட வேண்டிய கட்டாயம் இருப்பதால், அது வைபவின் இயல்பான ஆட்டத்திற்கு செட் ஆகாத காரணத்தால், அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தார். ஆனால் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, தனது பழைய ஃபார்மை மீட்டெடுத்து இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடினார். இலங்கை பந்து வீச்சை அனைத்து திசைகளிலும் சிதறடித்த அவர், வெறும் 11 பந்துகளில் அரைசதம் கடந்தார். ஒரு கட்டத்தில் இது ஐபிஎல் போட்டியா, இல்லை ஒருநாள் போட்டியா என்று ரசிகர்களே குழம்பிப் போனார்கள்.

அதன்பிறகும் விடாமல் தாக்குதல் ஆட்டத்தைத் தொடர்ந்த அவர், கடந்த போட்டியில் இலங்கை அணியினர் வம்பிழுத்த காரணத்தை மனதில் வைத்து கொண்டு இலங்கை பவுலர்களை வெளுத்து வாங்க ஆரம்பித்தார். 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என விளாசிய அவர், வெறும் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து, சதத்தைத் தவறவிட்டார்.
ஆனாலும், இந்தப் போட்டியில் அவர் ஆடிய விதம் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அவரது அதிரடி ஆட்டம், இந்திய அணியின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருப்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.