"அவன் அடிப்பான்; அவன் அடிப்பான்; அவன் அவன் கதையை முடிப்பான்" – ரெக்கார்ட் சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

Spread the love

“எங்க ஊர்… எங்க கிரவுண்டு… நாங்கதான் முதல்ல பேட்டிங் ஆடுவோம்!” என டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்சர் பட்டேல் தைரியமாகப் பேட்டிங்கைத் தேர்வு செய்தபோதே தெரிந்தது, இன்று அருண் ஜேட்லி மைதானத்தில் ஏதோ ஒன்று பெரிய சம்பவம் நடக்கப்போகிறது என்று.

ஆனால், பதிலுக்கும் பஞ்சாப்பும் பறந்து பறந்து அடித்து அது பஞ்சாப் கிங்ஸின் வரலாற்றுச் சாதனை வெற்றியாக முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

KL Rahul
KL Rahul

ஆரம்பத்திலேயே பஞ்சாப் பந்துவீச்சைப் பதற வைத்தார் கே.எல்.ராகுல். ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் லெக் சைடில் ராகுல் கொடுத்த அழகான கேட்ச் வாய்ப்பை, ஷஷாங் சிங் கோட்டை விட்டார்.

அதுவும் எப்படி தெரியுமா? கையில் வந்த கேட்சை அப்படியே தட்டிவிட்டு சிக்ஸருக்கு அனுப்பி வைத்தார். ‘சென்னை 28’ படத்தில் வரும் பிரேம்ஜி போல, கடந்த சில போட்டிகளாகவே ஷஷாங் சிங் கேட்ச்களைக் கோட்டை விடுவது பஞ்சாப் ரசிகர்களைப் புலம்ப வைத்து வருகிறது.

இந்த உயிர் பிழைப்புக்குப் பிறகு ராகுல் ஆடியது வெறும் ஆட்டம் அல்ல, அது ருத்ரதாண்டவம்! 10 ஓவரிலேயே டெல்லி 100 ரன்களைக் கடக்க, உள்ளூர் நாயகன் நிதிஷ் ராணாவும் தன் பங்கிற்கு சரவெடியைக் கிளப்பினார்.

ராகுல் சிக்ஸர்களைப் பறக்கவிடும்போது, கேமராமேன் பாவமாக நின்றிருந்த ஷஷாங் சிங்கை ஜூம் செய்ய, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் செம கடுப்பில் அலைந்து கொண்டிருந்தார்.

நீங்க ஏன் சிரமப்படுறீங்க, நாங்களே தர்றோம் என்பது போல மிஸ்பீல்ட், கேட்ச் டிராப் எனப் பஞ்சாப் வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். 220 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் நிதிஷ் ராணா 91 ரன்களில் அவுட் ஆனாலும், ராகுல் நங்கூரம் போல் நின்றார்.

Prabhsimran
Prabhsimran

67 பந்துகளில் 152 ரன்கள் விளாசி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையைப் படைத்து அசத்தினார் ராகுல். டெல்லி 264 ரன்கள் என்ற எட்ட முடியாத இலக்கை எட்டியபோது, பஞ்சாப் வீரர்கள் “விட்டாச்சு கேட்ச்… போச்சு மேட்ச்” என்கிற மைண்ட் செட்டுடன் பெவிலியன் திரும்பினர்.

“2024-லேயே 262 ரன்களை சேஸ் பண்ணவங்க நாங்க… இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி” என்கிற மிதப்பில் பஞ்சாப் களமிறங்கியது. கோச் ரிக்கி பாண்டிங் தலையைத் தொங்கப்போட்டாலும், தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன் மற்றும் பிரியான்ஸ் ஆர்யா விடவில்லை.

துரதிர்ஷ்டவசமாக டெல்லியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி தலையில் காயம் ஏற்பட்டு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட, அது பஞ்சாப் வீரர்களுக்குச் சாதகமானது.

பவர் பிளேயில் மட்டும் 116 ரன்களைக் குவித்து, ஆட்டத்தின் போக்கை அப்படியே தலைகீழாக மாற்றினர்.

“நான் அடித்த ரன்களெல்லாம் பவர் பிளேவிலே போகுதே” என ராகுல் கேப்டன் அக்சர் பட்டேலுக்கு அட்வைஸ் கொடுக்க, அக்சர் பட்டேலும், குல்தீப் யாதவும் சுழலில் விக்கெட்டுகளை எடுக்க, டெல்லி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது.

“அப்பாடா, இனி மேட்ச் நம்ம கையில்” என்று டெல்லி ரசிகர்கள் பெருமூச்சு விட, அப்போதுதான் என்ட்ரி கொடுத்தார் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர். யார் போனால் என்ன, நான் இருக்கிறேன் எனத் தூணாக நின்ற ஸ்ரேயஸ், அரைசதம் கடந்து மிரட்டினார்.

Shreyas
Shreyas

முடிவில், 19-வது ஓவரிலேயே 265 ரன்கள் எடுத்து, ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சேஸிங் சாதனையைப் படைத்து கெத்தாக பெவிலியன் திரும்பியது ஸ்ரேயஸ் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்.

இதுவரை நடந்த போட்டிகளில் தோல்வியே அடையாமல் இருந்த பஞ்சாப் அணி இந்த மிகப் பெரிய வெற்றியின் மூலம் முதலிடத்திலேயே பலம் வாய்ந்த அணியாக நீடிக்கிறது. கே. எல். ராகுல் அடித்த 150 ரன்கள் எல்லாம் வேஸ்ட் ஆக போக டெல்லி அணி அதே 6வது இடத்திலே இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *