காங்கிரஸ் கட்சியில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சிக் கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த பயிற்சிக் கூட்டத்தின் நிறைவு விழாவில் ராகுல் காந்தி கலந்துகொள்ளவிருக்கிறார். தமிழகம் வரும் ராகுல் விஜய்யை சந்திக்கிறார் என தகவல் பரவி வருகிறது. அது உண்மையா?

காங்கிரஸில் மொத்தம் 72 மாவட்டத் தலைவர்கள் பொறுப்பு இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 69 மாவட்டங்களுக்கான தலைவர்களை காங்கிரஸின் அகில இந்திய தலைமை அறிவித்தது. தேர்தல் காரணமாக அப்போது இவர்களுக்கு பயிற்சி கூட்டத்தை நடத்த முடியவில்லை.
அதனால் கடந்த ஜூலை 22 ஆம் தேதி முதல் மகாபலிபுரத்தில் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், லோக்கல் அரசியல் செயல்பாடுகள், கொள்கை சார்ந்த விவகாரங்கள் என பல விஷயங்களும் காங்கிரஸின் சீனியர்களால் மாவட்டத் தலைவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தின் நிறைவாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி ராகுல் காந்தி மாவட்டத் தலைவர்கள் மத்தியில் உரையாடி ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார்.

தமிழகம் வரும் ராகுல் காந்தி முதல்வர் விஜய்யை சந்திக்கவிருப்பதாக ஒரு தகவல் ஓடிவருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘ராகுல் காந்தியும் முதல்வர் விஜய்யும் சந்திக்கும் திட்டங்கள் எதுவும் இப்போது வரைக்கும் இல்லை. மாவட்டத் தலைவர்களின் கூட்டத்தில் மட்டுமே ராகுல் கலந்துகொள்கிறார்’ என்றனர்.