சிவகங்கை அருகேயுள்ள மானாமதுரையில் கொலை செய்ய முயற்சித்த வழக்கு ஒன்றில் ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் காவலில் இருந்த ஆகாஷ் டெலிசன் கைதான இரண்டாவது நாளே மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இறப்பதற்கு முன் நீதிமன்ற நடுவரிடம் ஆகாஷ் டெலிசன் கொடுத்த வாக்குமூலத்தில் போலீசார் தன்னுடைய காலை உடைத்ததாகக் கூறியிருந்தது, தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து இறப்பிற்குக் காரணமான காவல்துறையினரைக் கைது செய்யும் வரை ஆகாஷ் டெலிசனின் உடலை வாங்க மாட்டோம் எனப் பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களாக ஆகாஷ் டெலிசனின் உடல் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “50 லட்ச ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எஸ்.சி., எஸ்.டி., பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்”‘ என தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, ”விசாரணை அதிகாரி, முடிந்தவரை விரைவாக விசாரணையை முடித்து, சட்டப்படி அதிகார வரம்புக்குட்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தார்.