ஆக்கிரமிப்பு குடோனாக மாறிய சாலைகள்
புதுச்சேரியின் நகர்ப்புற சாலைகள் அனைத்தும் பிரெஞ் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு அமைக்கப்பட்டவை. பல ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட சாலைகள் என்றாலும், தற்போதைய மக்கள் தொகைக்கும் அது போதுமானதாகவே இருந்தது.
ஆனால் அரசியல் பின்னணியைக் கொண்ட சில வியாபாரிகள் மற்றும் தனிநபர்களின் ஆசையால் அந்தச் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, மக்கள் நடமாட முடியாத அளவுக்கு சுருங்கிவிட்டன.
அத்துமீறி கட்டப்பட்ட கட்டடங்கள், கடைகள், அவற்றின் விளம்பர பலகைகள் போன்றவை பிரதான சாலைகளில் 40% அடைத்துக் கொண்டிருக்கின்றன. அதனால் வருடத்தின் அனைத்து நாள்களிலும், அனைத்து சாலைகளும் நெரிசலில் நிரம்பி வழிகின்றன.

போக்குவரத்துக் காவலர்கள் போதுமான அளவுக்கு இல்லாததால், சிறிய பிரச்னைக்காக நீண்ட நேரம் மக்கள் சிக்கித் தவித்துவிடுவார்கள். வார இறுதி நாள்களில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வார இறுதி நாள்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும்.
ஆனால் சமீப நாள்களாக அனைத்து நாள்களிலும் அவர்களின் வருகை கணிசமாக இருப்பதால், நாள்தோறும் போக்குவரத்து நெரிசலுக்கிடையேதான் மக்கள் ஊர்ந்து செல்வார்கள்.
நகரப்பகுதியில் இருக்கும் புஸ்ஸி வீதியை மருத்துவச் சாலை என்று குறிப்பிடலாம். அந்த அளவுக்கு அங்கு அனைத்துவித நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்களின் கிளினிக்குகள் இருக்கின்றன.
நேரு வீதி கடைகளால் 100% ஆக்கிரமிப்புகள்
அந்த வீதியில் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடும் கடைகளை வைத்திருப்பவர்கள், 500 முதல் 1,000 வாகனங்களை சாலையில் நிறுத்தி விடுவார்கள். அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஒருபுறமிருக்க, மருத்துவர்களைப் பார்க்க வரும் நோயாளிகள் தங்களின் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் நொந்துவிடுவார்கள்.
இத்தனைக்கும் உள்ளூர்ப் பேருந்துகள் முதல் பள்ளிப் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் செல்லும் பிரதான சாலை அது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் மிஷன் வீதியிலும் இதே நிலைதான். சுற்றுலாவை முன்னிறுத்தும் மாநிலத்தில் வாடகை இருசக்கர வாகனங்கள் தவிர்க்க முடியாத ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் பொதுமக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கான சாலையை, வியாபார நோக்கத்தில் செயல்படும் கடைகள் ஆக்கிரமிப்பது எப்படி சரியாக இருக்கும்? தனியாக குடோன் வைத்து அங்கு நிறுத்தி வைத்து, தேவைப்படுபவர்களுக்கு வாடகைக்கு கொடுக்கலாம். ஆனால் நகராட்சியும், போக்குவரத்துக் காவல்துறையும் மக்களின் அவஸ்தைகளை ஒரு பிரச்னையாகவே பார்ப்பதில்லை.
அதேபோல புதுச்சேரியின் வர்த்தக வீதி என்று சொல்லப்படும் நேரு வீதி, ஆக்கிரமிப்புக்கு நடுவில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு வழிப் பாதையான அந்த வீதியில் ஒருபுறம் மட்டுமே வாகனங்களை நிறுத்த முடியும்.
அந்த வீதியின் இருபுறமும் சுமார் 600 வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த அனைத்துக் கடைகளும் மக்களுக்கான நடைபாதையை முழுதாக விழுங்கி விட்டன. ஒரு கடையில் குறைந்தபட்சம் 50 ஊழியர்கள் என தோராயமாக 30,000 ஊழியர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள்.
மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு குவியும் பாராட்டுகள்
இவர்கள் அனைவரும் தங்களது இருசக்கர வாகனங்களை, தாங்கள் பணிபுரியும் கடைகளின் வாசலிலேயே நிறுத்தி அந்த வீதி முழுவதையும் நாள் முழுவதும் ஆக்கிரமித்துவிடுகிறார்கள். காலையில் 9 மணிக்கு கடைக்குள் செல்லும் இவர்கள், இரவு 10 மணிக்குதான் வீட்டுக்குச் செல்கிறார்கள்.
போதாக்குறைக்கு ஒவ்வொரு கடையின் வாசலிலும் வழி என்ற பெயரில் விதிகளை மீறி, பேரிகார்டுகளையும், தடுப்புகளையும் வைத்து ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் கடைகளின் உரிமையாளர்கள்.
அதனால் அந்த வீதிக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள், தங்கள் வாகனங்களை இரண்டாவது வரிசையாக சாலையில் நிறுத்தி, போக்குவரத்துக் காவலர்களிடம் அன்றாடம் அபராதம் செலுத்துவது வாடிக்கையாகிவிட்டது.
மக்கள் புகார்களின் அடிப்படையில் நகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றால், அமைச்சரவையில் இருந்து செல்லும் தொலைபேசி அழைப்புகள் அவர்களை அமைதியாக திரும்பி வரவைத்துவிடும்.
இப்படியான சூழலில்தான், `புதுச்சேரி முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்’ என்று அறிவித்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், காவல்துறையுடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களாக அதைச் செயல்படுத்தி வருகிறார்.
பிரதான சாலைகளில் இருக்கும் அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடிச் செயலுக்கு பொதுமக்கள் ஆதரவையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் பெரும்பாலான ஆக்கிரமிப்புகளைச் செய்திருப்பது அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் பின்னணியில் இருக்கும் வணிகர்கள் என்பதால், எந்த நேரத்திலும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.