தலிபான்களின் ஆட்சி, பொருளாதார சரிவு, உலக நாடுகளின் புறக்கணிப்பு என போர் மேகங்கள் சூழ்ந்து, சிதைந்து கிடக்கும் ஆப்கானிஸ்தானின் தெருக்களில், ஒரு இந்தியப் பெண் இன்ஃபுளூயன்ஸர் எதைத் தேடி அலைந்திருப்பார்? ஆயுதங்களையா? இல்லை, கண்ணீர்க் கதைகளையா? இரண்டுமில்லை. அங்கிதா தேடியது, காலத்தால் மறக்கப்பட்ட ஒரு மரப்பெட்டியை; ஆப்கானிஸ்தானின் ஆன்மாவைத் தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும் ஒரு அதிசய கேமராவை.
ஸ்மார்ட்போன்களும், டிஜிட்டல் கேமராக்களும் வருவதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் உடனடிப் புகைப்படக் கலையாக இருந்தது இந்த ‘கம்ரா-இ-ஃபௌரி’ (KAMRA-E-FAOREE) என்று அழைக்கப்படும் கையால் செய்யப்பட்ட மரப்பெட்டி கேமராக்கள்தான். இது வெறும் கேமரா மட்டுமல்ல; அதுவே ஒரு டார்க்ரூம், அதுவே ஒரு பிரிண்டர். மின்சாரமோ, அதிநவீன உபகரணங்களோ தேவையில்லை. திறமை, வேதியியல் அறிவு, மற்றும் அளவற்ற பொறுமை இருந்தால் போதும். ஒரு புகைப்படத்தை அதே பெட்டிக்குள் எடுத்து, நெகட்டிவ்வை டெவலப் செய்து, பிரின்ட் எடுத்துக் கையில் கொடுத்துவிடுவார்கள்.

இந்த மரப்பெட்டி கேமராக்களைப் பற்றி சிறுவயதிலிருந்தே ஒருவித ஈர்ப்பு இருந்ததாக அங்கிதா குறிப்பிடுகிறார். “பல வருடங்களுக்கு முன்பு இவற்றின் புகைப்படங்களைப் பார்த்தபோது, ஒரு முழு புகைப்பட ஸ்டுடியோவையே ஒரு மரப்பெட்டிக்குள் அடக்கிவிட முடியும் என்ற எண்ணம் என்னை முற்றிலும் கவர்ந்தது.
அன்றிலிருந்து, அதன் செயல்பாட்டை நேரில் பார்ப்பது எனது ரகசிய கனவாகவே இருந்தது,” என்கிறார் அவர். ஆப்கானிஸ்தானில் நேருக்கு நேர் நின்று, ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டு, அதே பெட்டிக்குள் அது உயிர்பெற்று வருவதைப் பார்த்த தருணம், ஒரு கனவுலக அனுபவமாக இருந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். “இது பயணங்களில் அமையும் சில சிறிய தருணங்களில் ஒன்றுதான். ஆனால், எனக்கு அது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிகப் பெரிய அர்த்தத்தைக் கொடுத்தது,” என்று அவர் விவரிக்கிறார்.