தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பவர்ஃபுல் பதவிகளைப் பெற காயை நகர்த்தி வருகின்றனர். தற்போது முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டவர்கள். அதனால் புதிய ஆட்சி அமைந்ததும் அந்த அதிகாரிகளில் பலர் இடமாற்றம் செய்யப்படுவார்கள். தமிழக காவல்துறையை பொறுத்தவரை இதுவரை தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு விசுவாசமான அதிகாரிகளே இருந்தனர். முதல் தடவையாக த.வெ.க -வுக்கு விசுவாசமான அதிகாரிகள் உருவாக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள் எனக் கருதப்பட்ட சிலர், த.வெ.க-வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மூலம் பவர்ஃபுல் பதவிகளைப் பெற முயற்சி செய்து வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க, தேர்தல் ஆணையத்தால் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோரும் விஜய்க்கு ஆதரவான நிலைபாட்டிலேயே இருந்து வருகிறார்.
அதனால் புதிய ஆட்சி அமைந்ததும் அவரே தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக தொடர அதிக வாய்ப்புள்ளது. இதைபோல தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனர்கள், உளவுத்துறை ஐ.ஜி ஆகியோரும் புதிய ஆட்சி அமைந்ததும் இடமாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் த.வெக 108 இடங்களைப் பிடித்ததும் அந்தக் கட்சியின் தலைவர் விஜய்யின் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேலூர் டி.ஐ.ஜியாக இருந்த தர்மராஜனை சென்னைக்கு ஸ்பெஷல் டூயூட்டியாக வரும்படி டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. உடனடியாக அவரும் சென்னை வந்து விஜய்யின் பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்.