
தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் சென்னை காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இட்லி இனியவன் என்பவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், Youtuber சதாம் உசேன் என்பவர் சமூக வலைதளங்களில் பல கேட்டரிங் நிறுவனங்களில் மட்டன் இறைச்சிக்கு பதிலாக கன்று குட்டி இறைச்சியை கலந்து உணவு தயாரித்து வழங்குவதாக ஒரு குற்றச்சாட்டினை வைத்துள்ளார்.
அதில் அவர் எந்த கேட்டரிங் நிறுவனத்தின் பெயரையும் பயன்படுத்தாமல் எந்த இடத்தில் இது போன்ற சம்பவம் நடைபெற்றது, என்பதையும் குறிப்பிடாமல் பொதுவாக ஆதாரமற்ற ஒரு தகவலை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இது போன்று சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை மற்றும் உணவு தொடர்பாக ஆட்டு இறைச்சிக்கு பதிலாக மாட்டிறைச்சியை கலப்படம் செய்வதாக பேசி இருப்பது பல ஆண்டுகள் நேர்மையாக தரமான உணவுகளை வழங்கி வரும் ஆயிரக்கணக்கான கேட்டரிங் தொழில் முனைவோர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாவது மட்டும் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை அந்த யூட்யூபர் தெரிவித்ததை போல் கேட்டரிங் நிறுவனம் தவறு செய்திருந்தால் அதன் பெயர் மற்றும் முழு விவரங்களை வெளியிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
ஆனால் எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக கேட்டரிங் துறையை குற்றம் சாட்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பது மக்களிடையே பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று ஆதாரங்கள் இல்லாமல் அனைத்து கேட்டரிங் தொழில் நடத்துபவர்களையும் சித்தரித்து பேசும் சதாம் உசேன் மீது போலீசார் தகுந்த விசாரணை மேற்கொண்டு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் வழங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.