தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள விசிக அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு மரியாதை செலுத்திய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
முன்னதாக அவர் பேசுகையில்: கொள்கை நிலைப்பாடுகளை முதன்மையாக வைத்து கொள்கை அறிக்கையாக வெளியிடுகிறோம். தேர்தல் நடைபெறும்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்துவது அப்பட்டமானது. பன்மைத்துவத்தை சிதைக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என விசிக வலியுறுத்துகிறது.
16,17,18 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில் என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. 3 நாட்களும் எதை விவாதிக்கப் போகிறோம் என்பது குறித்து பாஜக அரசு இதுவரை அறிவிக்கவில்லை. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடக்கும் நேரத்தில் கூட்டத் தொடரை நடத்துவதால் ஐயம் ஏற்படுகிறது என்று பேசினார்.
விசிக தேர்தல் அறிக்கையில்: இருமொழிக் கொள்கை, கடலும் காடும் கனிமமும் நமதே, விலையில்லா கல்வியைப் பெறுவோம், மருத்துவத்தை அடிப்படை உரிமையாக்குவோம், மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பெறுவோம், மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு, தனியார் நிறுவனங்களில் சமூக நீதியை வென்றெடுப்போம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
மேலும், உழுபவருக்கு நிலம், இருப்பவருக்கு இடம் என்னும் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம், சிறுபான்மையினரைக் காத்திட சிறப்பு சட்டம் இயற்ற போராடுவோம், காவல்துறை மற்றும் சிறைத்துறையை சீர்திருத்த பாடுபடுவோம், மது மற்றும் போதைப் பொருள்களை ஒழிப்பதற்கு பிரசாரம் மேற்கொள்வோம், ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற பாடுபடுவோம் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
