பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார்.
டிஸ்கவரி தொலைக்காட்சியின் ‘டிக்ளாசிஃபைட்: ஆபரேஷன் சிந்தூர்’ என்ற வரவிருக்கும் ஆவணத்தொடருக்கான நேர்காணலில், இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு மற்றும் எல்லை தாண்டிய பதிலடி குறித்த முக்கிய விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று 26 அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, அதற்குக் காரணமான பயங்கரவாதக் கட்டமைப்புகளை மட்டுமே இலக்காகக் கொண்டு அழிக்க இந்தியா முடிவெடுத்தது.

தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள், `போய் மோடியிடம் சொல்லுங்கள், அவரால் முடிந்தைச் செய்யட்டும்” என்று இந்தியத் தலைமைக்குச் சவால் விடுத்தனர்.
பஹல்காம் படுகொலைக்குப் பின் பிரதமர் மோடி தனது வெளிநாட்டுப் பயணத்தைச் சுருக்கிக் கொண்டு இந்தியா திரும்பினார். விமான நிலையத்திலேயே அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில், `தாக்குதலை யார் செய்தது? இதற்கு யார் பொறுப்பு?’ என்று பிரதமர் கேட்டார்.