Tamilnadu
oi-Vignesh Selvaraj
சென்னை: தவெக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மூத்த குடிமக்கள் புனித பயணத்திட்டத்தில் ஒரு நபருக்கு ரூ.800 என்ற அளவிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தனது முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் மரிய வில்சன் தவெக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு புனிதப் பயணம் என்ற திட்டத்தில் ஆண்டுதோறும் 2.5 லட்சம் மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

விரும்பிய புனிதத் தலங்களுக்கு அரசு ஏற்பாட்டில் பயணம் குளிர்சாதன வசதியுடன் பயணம், தரமான தங்குமிடம் மற்றும் உணவு வசதி வழங்கப்படும். இதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
மூத்த குடிமக்கள் புனித பயணத்திட்டம் என்று பெயர் மாற்றிவிட்டு, இந்த திட்டத்தில் 2.5 லட்சம் நபர்கள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தவெக அரசு அறிவித்திருக்கிற மொத்த தொகை 20 கோடி. அதாவது தலா ரூ.800 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகையை வைத்து புனித பயணமாக வாட்டிகன் போக முடியாது, வாடிப்பட்டி மாதா கோயிலுக்கு போக மட்டுமே முடியும், அதுவும் போய்விட்டு திரும்ப முடியாது என நெட்டிசன் ஒருவர் ஃபேஸ்புக்கில் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
இதுபோல, பல்வேறு திட்டங்களிலும் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகமாக தெரிவித்துள்ளனர். அதேசமயம், நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ளது. இந்தத் திட்டங்களை அறிவித்துள்ளபடி செயல்படுத்துவது ஆகாத காரியம் என்கிறார்கள் பலரும்.
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்திற்கு 110 கோடி நிதி அறிவித்து, 30,000 பேர் பயன் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 12,600 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ள நிலையில், ஒரு கிராம ஊராட்சிக்கு 2 பேர் மட்டுமே பயன்பெற முடியும் என்ற அளவில் இந்த திட்டம் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.