Business
oi-Prasanna Venkatesh
சென்னையில் வாழும் மக்களுக்குப் பயண நேரத்தைக் குறைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்குத் தங்களின் அன்றாடத் தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்வதும் அவசியம். இதனை சரியாக உணர்ந்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), தனது இரண்டாம் கட்டத் விரிவாக்க திட்டத்தில் ஒரு மாபெரும் புரட்சியை செய்ய திட்டமிட்டு உள்ளது.
இனி சென்னை மெட்ரோ நிலையங்கள் என்பது வெறும் ரயில்கள் வந்து செல்லும் இடமாக மட்டும் இருக்கப் போவதில்லை. மாறாக, பொதுமக்கள் தங்களின் வீட்டு அருகிலேயே ஷாப்பிங் செய்யவும், பொழுதுபோக்கவும் ஏதுவாகப் ‘மினி மால்கள்’ மற்றும் வணிக வளாகங்களாக உருமாறப் போகின்றன.

மெட்ரோவின் புதிய வருவாய் உத்தி!
சென்னை மெட்ரோவின் காரிடர் 3 மற்றும் காரிடர் 4 ஆகிய வழித்தடங்களில் வரவிருக்கும் 13 முக்கியச் சுரங்க மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் உள்கட்டமைப்புகளுடன் இந்த அதிநவீன வணிக வளாகங்கள் அமைக்கப்பட உள்ளன.
சென்னை மெட்ரோவின் இந்த ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், ஒட்டுமொத்தமாகச் சுமார் 33,486 சதுர மீட்டர் (அதாவது 3.6 லட்சம் சதுர அடி) பரப்பளவில் பிரம்மாண்டமான ரீடைல், வணிகக் கட்டிடங்கள் மற்றும் நவீன அலுவலக இடங்கள் கட்டப்படவுள்ளன.
இதற்கான விரிவான வடிவமைப்பு ஆலோசகர்களை (Detailed Design Consultants) நியமிக்க இரண்டு முக்கிய டெண்டர்களை மெட்ரோ நிர்வாகம் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாகக் வெளியிட்டு உள்ளது.
இந்த புதிய திட்டம் மூலம், ரயிலில் பயணிக்கும் பயணிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் மெட்ரோ நிலையங்களில் இருக்கும் வணிக வளாகங்களுக்குள் நேரடியாகச் சென்று வர முடியும். மெட்ரோவின் தினசரி இயக்கச் செலவுகளைச் சமாளிக்கவும், திட்டத்திற்காக வாங்கப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்தவும் பயணக் கட்டணம் அல்லாத மாற்று வருவாய் (Non-fare revenue) மிகவும் முக்கியம் என்று போக்குவரத்துத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
காரிடர் 4: நந்தனம் முதல் கச்சேரி சாலை
சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டத்தில் உள்ள காரிடர் 4 வழித்தடத்தின் கீழ் வரும் மிக முக்கியமான 5 சுரங்க மெட்ரோ நிலையங்களில் இந்த வணிக மேம்பாட்டுத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, கச்சேரி சாலை, ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலை, போட் கிளப் மற்றும் நந்தனம் ஆகிய சுரங்க மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளுக்கு மேலே இந்த அதிநவீன வணிகக் கட்டிடங்கள் அமையவுள்ளன.
காரிடர் 3: சேத்துப்பட்டு முதல் அடையாறு வரை
இதேபோன்று, சென்னையின் மையப்பகுதிகளையும் தென் சென்னைப் பகுதிகளையும் இணைக்கும் காரிடர் 3 வழித்தடத்திலும் இந்த மேம்பாட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இந்தத் காரிடாரில் உள்ள சேத்துப்பட்டு, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை (Royapettah GH), ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம், டாக்டர் ஆர்.கே. சாலை மற்றும் அடையாறு பணிமனை (Adyar Depot) ஆகிய 6 முக்கியச் சுரங்க மெட்ரோ நிலையங்களில் இந்த மேம்பாட்டு திட்டங்கள் அமையவுள்ளன. இந்த மெட்ரோ நிலையங்களில் 10 மாடி வரையிலான பிரம்மாண்ட கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கு உதாரணமாக, அடையாறு மெட்ரோ நிலையத்தின் நுழைவாயிலையொட்டி சுமார் 546.52 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமான ரீடைல் வணிக இடம் ஒதுக்கப்படவுள்ளதுடன், அங்கு 11 கார்களை நிறுத்துவதற்கான பிரத்யேக பார்க்கிங் வசதியும் திட்டமிடப்பட்டுள்ளது.
மற்ற மெட்ரோ நிலையங்களிலும் இடவசதிக்கு ஏற்ப பார்க்கிங் வசதிகள் பல்வேறு அடுக்குகளாக விரிவுபடுத்தப்படவுள்ளன. ஏற்கனவே மாதவரம் ஹை ரோடு, செம்பியம், அயனாவரம், ஓட்டேரி, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, புரசைவாக்கம் மற்றும் திருமயிலை ஆகிய மெட்ரோ நிலையங்களுக்கும் இத்தகைய சொத்து மேம்பாட்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.