International
oi-Velmurugan P
தெஹ்ரான்: அமெரிக்காவை இஸ்ரேல் தேவையில்லாமல் ஈரான் சிக்க வைத்துவிட்டதாக பல உலக அரசியல் நிபுணர்கள் பார்க்கிறார்கள். வடிவேலு ஒரு படத்தில் என்னையவாடா அடிக்கிறீங்க என்று கோபப்படுவார்.. உடனே என் தலைவனை கூட்டி வருகிறேன் என்று போய், ஒரு பெரிய ரவுடியை கூட்டி வருவார். அவரிடம் சுற்றியுள்ளவர்கள், இவனை கூட்டி செல் என்று எச்சரிப்பார்.. ஆனால் எச்சரிக்கையை மீறும் வடிவேலு.. இப்ப எறி..இப்ப எறிடா என்று கூறுவார்.. அப்படித்தான் அமெரிக்கா இஸ்ரேலுக்காக உள்ளே போய் அடிவாங்கி வருகிறது. என்னதான் அமெரிக்கா மிகப்பெரிய டான் என்றாலும், அவர்களை எங்கு அடித்தால் வழிக்கும் என்பதை ஈரான் நன்கு அறிந்து வைத்து அங்கேயே அடிக்கிறது.. அமெரிக்கா இதுவரை சந்திக்காத எதிரியை ஈரான் இருக்கிறது.
அமெரிக்கா ஒரு கோபத்தில் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மின் உற்பத்தி நிலையங்களை முடக்குவோம் என்று எச்சரித்தது. பதிலுக்கு ஏதாவது சொல்லியிருக்கலாம் ஈரான்.. ஆனால் உலகமே சற்று யோசிக்காத விஷயத்தை கூறி அமெரிக்காவை ஆடிப்போக வைத்துள்ளது.ஒன்று கச்சா எண்ணெய் ஏற்றுமதி எங்களுக்கும் வேண்டும்.. ஆனால் எங்களுக்கு கிடையாது என்றால்.. யாருக்கும் கச்சா எண்ணெய் கிடைக்காது என்று ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது.

ஏற்கனவே ஹார்முஸ் நீரிணைணை மூடி அமெரிக்கா முதல் இந்தியாவை வரை உலகின் பல நாடுகளை மொத்தமாக கலங்க வைத்தது ஈரான்.. வளைகுடா நாடுகளில் தான் கச்சா எண்ணெய், கேஸ் இந்தியாவிற்கு பெரும்பாலும் வருகிறது. இது ஸ்தம்பித்து போனாதால், மூன்று மாதம் மக்கள் அவஸ்தை பட்டனர். இன்னும கேஸ் பிரச்சனை தீரவே இல்லை.. எனினும் ஓரளவு நிலைமை சரியாகி உள்ளது.
ஏனெனில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த மாதம் 60 நாள் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் இரு நாடுகளும் மீண்டும் பரஸ்பரம் தாக்குதலை தொடங்கியதால், அமைதி ஒப்பந்தம் முறிந்துவிட்டது. அமெரிக்கா-ஈரான் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் வளைகுடா பகுதிகளில் பதற்றம் அதிகரித்து கச்சா எண்ணெய் விலை கற்பனை செய்ய முடியாத வேகத்தில் உயர்ந்து வருகின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானிய துறைமுகங்கள் மீது மீண்டும் கடுமையான கடற்படை முற்றுகையை அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் ஆவேசமாக கோபத்தில் கூறும் போது, “பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ஈரானின் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் அடுத்த வாரம் தகர்க்கப்படும்” என்று மிரட்டல் விடுத்து எச்சரித்துள்ளார்.
டிரம்பின் உத்தரவுப்படியே அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவு ஈரானிய ராணுவ இலக்குகள் மீது தொடர்ந்து 4-வது நாளாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக இந்தியா பெரும் முதலீடு செய்துள்ள ஈரானின் சபஹார் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்கா 2-வது முறையாக வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. துறைமுக வளாகத்தில் உள்ள ஷாஹித் கலந்தாரி முனையத்தின் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் அமெரிக்க ஏவுகணையால் தாக்கப்பட்டு பலத்த சேதமடைந்திருக்கிறது.
இந்த தாக்குதலால் கோபுரத்திலிருந்து பெரிய அளவில் கரும்புகை வெளியேறியதுடன், துறைமுகப் பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. மேலும், துறைமுகத்தின் இரண்டு கப்பல் தளங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத், ஜோர்டான், கத்தார் ஆகிய நாடுகளை நோக்கி ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் புதிய கடல்வழி முற்றுகைக்கு எதிர்வினையாக, ஒட்டுமொத்த மத்திய கிழக்கின் எரிசக்தி ஏற்றுமதியையும் முடக்கப்போவதாக ஈரானின் புரட்சிகர காவல் படை கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறது. “வளைகுடா பிராந்தியத்தில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி என்பது ஒன்று அனைவருக்கும் கிடைக்க வேண்டும், அல்லது யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்று மிரட்டல் தொனியில் ஈரான் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளது. அமெரிக்காதான் கோபத்தில் மின் நிலையங்களை தகர்ப்போம் என்று கூறுகிறது என்று பார்த்தால், அமெரிக்காவை பழிவாங்குவதாக நினைத்து, மொத்த எண்ணெய் வளத்தையும் அழித்துவிடுவோம் என்று ஈரான் சொல்கிறது.
அமெரிக்காவின் பலத்திற்கு எதிராக ஈரான் சண்டை செய்யவில்லை.. மாறாக அமெரிக்காவின் பலவீனம் எதுவோ, அதில் சண்டை செய்கிறது. அதற்கு அந்த நாட்டின் புவியியல் அமைப்பும் பக்கபலமாக இருக்கிறது. மற்ற நாடுகளை போல் ஈரானை அமெரிக்கா எளிதாக வீழ்த்த முடியாத அளவிற்கு நிலப்பரப்பு கடினமானதாக இருக்கிறது. ஒரே அடியாக எந்த ஒரு பலமான முடிவும் எடுக்க முடியாமல் இருக்கிறது. நாம் முதல் பாராவில் சொன்னது போல், எங்கே அடித்தால் அமெரிக்காவிற்கு வலிக்குமோ, அங்குதான் ஈரான் பலமாக அடிக்கிறது. இது அமெரிக்காவை மட்டுமல்ல,இந்தியாவையும் கடுமையாக பாதித்து வருகிறது.
இந்தியாவில் ஒரு வீட்டில் அடுப்பு எறிய வேண்டும் என்றால், அமெரிக்கா ஈரான் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இதற்கு ஈரான் இறங்கி வர வேண்டும் அமெரிக்காவும், அமெரிக்கா இறங்கி வர வேண்டும் ஈரானும் பிடிவாதமாக உள்ளன. அதுமட்டுமல்ல ஈரானில் அமெரிக்கா ஏற்படுத்திய சேதம் மிக அதிகம், அதற்கு இழப்பீடும் கேட்கிறது..
இந்த பஞ்சாயத்து எப்போது முடியும் என்று தெரியாமல் உலகமே தவிக்கிறது. நாம் முதல்லைனில் சொன்னது போல் இஸ்ரேலுக்காக சண்டைக்கு வந்து, வெளியேறவும் முடியாமல், முழுமையாக சண்டை போடவும் முடியாமல் அமெரிக்கா தவிக்கிறது. இதில் சீனா, ரஷ்யா நினைத்தால் ஒரே நாளில் பிரச்சனை முடிவுக்கு வரும். ஆனால் அவர்கள் அவ்வளவு எளிதாக இதனை விடுவார்களே என்பதே பெரிய கேள்வி.

