இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு போறீங்களா? முதல்ல இதுல நுழைங்க பார்க்கலாம்! கோயில் நிர்வாகம் அதிரடி! | New restrictions imposed in Thiruvannamalai Idukku Pillaiyar temple premises

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

திருவண்ணாமலை: திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் குறுகிய இரும்பு கம்பிகளுக்கு இடையே நுழைவோருக்கு மட்டுமே துவாரத்தில் நுழைய அனுமதி வழங்கப்படும் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஏராளமான கோயில்கள், ஆசிரமங்கள் உள்ளன. கிரிவலம் செல்வோர் பெரும்பாலும் இந்த கோயில்கள், ஆசிரமங்களுக்கு செல்வது வழக்கம்.

Thiruvannamalai Idukku Pillaiyar Temple

அந்த வகையில் அண்மைக்காலமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது இடுக்கு பிள்ளையார்கோயில். இங்கிருந்து துவாரம் வழியாக உள்ளே சென்று வந்தால் நோய் நொடி தீரும் என்பது ஐதீகம்.

குழந்தைகள் சுக பிரசவத்தின் போது தாயின் கருப்பையில் இருந்து எப்படி நெளிந்து வளைந்து வெளியே வருகிறதோ அது போன்ற ஒரு அனுபவத்தைத்தான் இந்த துவாரத்தில் நுழையும் போது தருகிறது.

கோயிலின் பின்புற வாசல் வழியாக ஒருக்களித்தப்படியே உள்ளே நுழைய வேண்டும். இதையடுத்து உடலை வளைத்து வளைத்து அடுத்த வாசலை கடந்து முன்பக்கம் வழியாக வெளியே வந்தால் பிள்ளையார் தரிசனம் கிடைக்கும்.

இப்படி இந்த இடுக்கு பிள்ளையார் கோயிலில் என்னதான் இருக்கிறது தெரியும். இவ்வாறு நெளிந்து வளைந்து செல்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. உடல் வலிகள் பறந்து போகின்றன என்கிறார்கள்.

அது போல் இந்த கோயிலில் இடுக்கில் நுழைந்து சென்றால் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் புதுமணத் தம்பதிகளும் இங்கு அந்த துவாரத்தில் நுழைந்து செல்கிறார்கள். மேலும் பில்லி, சூனியம் உள்ளிட்ட எதிர்மறை ஆற்றல்களும் இந்த கோயிலுக்கு சென்றால் நம்மை விட்டு நீங்குவதாக நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

அந்த வகையில் யாரோ சாமியார் சொன்னதாக ஆந்திரா, தெலுங்கானா மாநில பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகிறார்கள். அந்த வகையில் கடந்த 24 ஆம் தேதி இரவு ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த வெங்கடேசலு மகன் தாசரி மணிக்குமார் (36), தனது குடும்பத்தினருடன் கிரிவலம் சென்றிருந்தார்.

பின்னர் நள்ளிரவு சுமார் 1.40 மணிக்கு இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு வந்தனர். அப்போது தாசரி , குகை வடிவ இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குள் நுழைந்தார். அவரது உடல் பருமனாக இருந்ததால் அவரால் வெளியே வர முடியாமல் தவித்தார்.

உடனே அங்கிருந்த உறவினர்களும் பொதுமக்களும் அவரை வெளியே இழுக்க முயற்சித்தனர். ஒரு கட்டத்தில் தாசரி மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்த துவாரத்திற்கு நுழைந்து சிக்கிக் கொண்டார்.

பிறகு அவரை பக்தர்கள் வெளியே இழுத்து காப்பாற்றினர். இதனால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது. இது போல் தொடர்ந்து இரு சம்பவங்கள் நடந்த நிலையில் இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு உடல்பருமன் கொண்டவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் செல்ல தடை விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய பதாகையை வைத்துள்ளனர்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கோயிலுக்குள் குறுகிய அளவில் இரு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் யாரால் நுழைந்து செல்ல முடிகிறதோ அவர்கள் கோயிலுக்குள் சென்று துவாரத்தில் நுழையலாம்.

ஒரு வேளை அந்த கம்பிலேயே நுழைய முடியாதவர்கள் கோயிலுக்குள்ளேயே செல்ல முடியாது. துவாரத்தையும் நெருங்க முடியாது. வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்லலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *