ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க தரப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க தரப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சத்யபாமா உள்ளிட்ட சில உறுப்பினர்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.க- வில் இணைந்துள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியான ஒரே மாதத்தில் தங்களின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த விவகாரம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. மேற்கொண்ட சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை அரசு அலுவலர்கள் தொடங்கி உள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்கும் பணிகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகின்றன.

இடைத்தேர்தல் குறித்து தெரிவித்த ஈரோடு மாவட்ட அதிகாரிகள், ” பெருந்துறை தொகுதியில் 292 வாக்குப்பதிவு மையங்கள் உள்ள நிலையில், 200 சதவிகித இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. 584 இயந்திரங்கள் , வி.வி.பேட் ஆகியவற்றை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெல் நிறுவனத்தில் இருந்து 6 பொறியாளர்கள் வந்து இயந்திரங்களின் செயல்பாட்டை சரிபார்த்து வருகின்றனர். இடைத்தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பணிகள் தொடங்க இருக்கின்றன” என்றனர்.