'இதுதான் சரியான நேரம்!' – தோழமை கட்சிகளின் கூட்டத்தை கூட்டும் முதல்வர் விஜய்! – பின்னணி என்ன?

Spread the love

ஆட்சியமைக்க ஆதரவளித்த மற்றும் தங்களுக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் தோழமைக் கட்சிகளின் கூட்டத்துக்கு முதல்வர் விஜய் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த சமயத்தில் இப்படியொரு கூட்டத்தை நடத்துவதற்கு பின்னால் முதல்வர் தரப்பு நிறைய கணக்குகளை தீட்டி வைத்திருப்பதாக கூறுகின்றனர் விவரமறிந்தவர்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன்தான் தவெக கூட்டணி அரசு நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த கூட்டணி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

தங்களுக்கு ஆதரவு தெரிவித்த இந்த கட்சித் தலைவர்களுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை முதல்வர் விஜய் நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு கோவளத்தில் நடத்தவிருக்கிறார். இந்த கூட்டத்துக்கான அழைப்புகளும் முறைப்படி அத்தனை கட்சிகளுக்கும் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தவெகவின் சீனியர்கள் சிலர்,

திருமா

‘தவெக அரசு அமைய நிறைய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும் காங்கிரஸை தவிர யாரும் எங்களை முழு மனதுடன் ஆதரிக்கவில்லை. விசிக, கம்யூனிஸ்ட்டுகள், ஐ.யூ.எம்.எல் என அத்தனை பேரும் அவ்வபோது திமுகவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது.

விசிக மீது ஆ.ராசாவை வைத்து திமுக கடும் விமர்சனங்களை முன்வைக்கிறது. அதற்கு அமைச்சர் வன்னி அரசுவும் காட்டமாக பதில் கூறி வருகிறார். அதேமாதிரி, கம்யூனிஸ்ட்டுகள் குறித்தும் முரசொலியில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை திமுக வெளியிட்டு வருகிறது. இதற்கு கம்யூனிஸ்ட்டுகளும் தக்க பதிலடி கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இன்னொரு பக்கம் மதிமுகவும் ஐ.யூ.எம்.எல் உம் பொதுக்குழுவை கூட்டி திமுக கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துவிட்டன. திமுக மீது ஏனைய கட்சிகளுக்கு அதிருப்தி அதிகமாகி முரண்பாடுகள் முற்றியிருக்கும் இந்த சூழலை முதல்வர் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்.

இந்த சமயத்தில் தோழமை கட்சிகளையெல்லாம் ஒன்றிணைத்து கூட்டம் போடுவதன் மூலம், ‘நாமெல்லாம் ஒன்றாக நிற்கலாம். திமுக கூட்டணி போல அல்லாமல் உங்களுக்கான உரிய மரியாதை எப்போதும் இங்கே கிடைக்கும்’ என உறுதிப்படுத்தவிருக்கிறார்.

பெ.சண்முகம்

அதேமாதிரி, அரசு நிர்வாகரீதியாகவும் உங்கள் தரப்பு கருத்துகளை எப்போது வேண்டுமானாலும் தெரியப்படுத்தலாம் என்றும் கூறவிருக்கிறார். இந்த தோழமைக் கட்சிகளை இடைத்தேர்தலுக்குள் ஒரு `முழு கூட்டணியாக’ மாற்ற வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம். அதன்மூலம் தேர்தல் களத்தில் திமுகவை இன்னும் தனிமைப்படுத்தி பலவீனமாக்க வேண்டுமென நினைக்கிறார். அதற்கான காய் நகர்த்தல்தான் இந்த கூட்டம்’ என்கின்றனர்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *