இந்தியாவில் சிக்கியுள்ள ஈரானின் ₹66,000 கோடி.. கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் அமெரிக்கா.. பின்னணி | Iran Frozen Assets: Struggles to Reclaim $100 Billion, $7 Billion Parked in India Amid US Sanctions

Spread the love

International

oi-Vigneshkumar

தெஹ்ரான்: உலகின் மிக அதிகளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று ஈரான்.. ஆனால், அந்த நாடு மற்ற நாடுகளுக்கு விற்ற எண்ணெய் மற்றும் எரிசக்தி பொருட்களுக்கான பில்லியன் கணக்கான டாலர்கள் இன்று பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கின்றன. இந்த பணம் ஏன் முடக்கப்பட்டது? எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பணம் உள்ளது? இதனால் ஈரானுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஈரானின் சொத்துக்கள் முடக்கப்படுவது இன்று நேற்று தொடங்கியதல்ல. 1979ம் ஆண்டு ஈரானில் நடந்த இஸ்லாமியப் புரட்சி காலத்திலிருந்தே சில சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போது முடக்கப்பட்டுள்ள தொகையில் பெரும்பகுதி சமீபத்திய ஆண்டுகளில் முடக்கப்பட்டவையாகும்.

Iran Middle east Hormuz Blood Red video

தடை எப்படி

2015ம் ஆண்டு ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே ஒரு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், 2018ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அத்துடன் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்தார். இதனால் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கிய நாடுகள் அதற்கான தொகையை ஈரானுக்குச் செலுத்த முடியாமல் போனது. அமெரிக்க டாலரை எந்த நாடும் ஈரானுக்குப் பணம் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. மீறி அனுப்பினால், அந்த நாட்டின் வங்கிகள் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும். இதனால்தான் ஈரானின் பணம் அந்தந்த நாடுகளிலேயே முடங்கிக் கிடக்கிறது.

ஈரானின் மொத்த முடக்கப்பட்ட சொத்துக்கள் எவ்வளவு என்பதில் தெளிவான தகவல் இல்லை. இது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களே உள்ளன. குறைந்தது 100 பில்லியன் டாலர்கள் வெளிநாடுகளில் முடங்கியுள்ளதாக ஈரான் அரசு கூறுகிறது.. ஆனால், பொருளாதார வல்லுநர்கள் இந்தத் தொகை சற்று குறைவாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். தற்போது ஈரான் தனது முதல் கட்டமாக சுமார் 24 பில்லியன் டாலர்களை விடுவிக்க முயற்சி செய்து வருகிறது. முக்கியமாக ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் ஈரானின் பணம் சிக்கியுள்ளது.

1. சீனா

சீனாவிடம் $20 பில்லியன் முதல் $50 பில்லியன் (₹1.88 லட்சம் கோடி முதல் ₹4.72 லட்சம் கோடி) வரை இருக்கலாம் எனத் தெரிகிறது. ஈரானின் கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வாங்கும் நாடு சீனா. அங்குதான் ஈரானின் மிகப் பெரிய அளவிலான தொகை முடங்கியுள்ளது. தடைகள் இருந்தபோதிலும், சீனா மறைமுக வழிகளில் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கி வருகிறது. இந்தப் பணத்தை நேரடியாகப் பெற முடியாவிட்டாலும், சீனாவிடமிருந்து இயந்திரங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களை வாங்க ஈரான் இந்தப் பணத்தைப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

2. ஈராக்

ஈராக்கிடம் 15 பில்லியன் டாலர் (₹1.41 லட்சம் கோடி) முடங்கிக் கிடக்கிறது. ஈராக் தனது மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு தேவைக்காக ஈரானையே பெரிதும் நம்பியுள்ளது. இதற்காக ஈராக் வழங்க வேண்டிய 15 பில்லியன் டாலர்கள் நிலுவையில் உள்ளன. அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் ஈராக்கினால் இந்தப் பணத்தை ஈரானுக்கு நேரடியாக வழங்க முடியவில்லை.

3. இந்தியா

2018க்கு முன்பு வரை ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கிய இரண்டாவது பெரிய நாடு இந்தியா. தடைகள் விதிக்கப்பட்ட பிறகு, இந்திய வங்கிகள் ஈரானுக்கான தொகையைச் செலுத்த முடியாமல் நிறுத்தி வைத்தன. இதனால் சுமார் 7 பில்லியன் டாலர்கள் (₹66,080 கோடி) இவ்வாறு இந்திய வங்கிகளில் உள்ளன.

4. தென் கொரியா

அதேபோல தென் கொரியாவும் ஈரானின் முக்கிய வாடிக்கையாளராக இருந்தது. அங்கு முடக்கப்பட்டிருந்த 7 பில்லியன் டாலர்களில் (₹66,080 கோடி) ஒரு பகுதி, சமீபத்தில் அமெரிக்காவுடனான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக கத்தாருக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

5. கத்தார்

தென் கொரியாவிலிருந்து மாற்றப்பட்ட 6 பில்லியன் டாலர்கள் (₹56,640 கோடி) தற்போது கத்தாரில் உள்ளன. இந்தப் பணம் மனிதாபிமான தேவைகளுக்காக (உணவு, மருந்து) மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், 2023 அக்டோபரில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய பிறகு, இந்தப் பணத்தை விடுவிப்பதில் அமெரிக்கா மீண்டும் தயக்கம் காட்டி வருகிறது.

ஜப்பான், லக்சம்பர்க், ஓமன் மற்றும் அமெரிக்காவிலும் ஈரானின் சிறிய அளவிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 8 பில்லியன் வரும் என தெரிகிறது.

ஈரானுக்கு என்ன லாபம்?

ஈரான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்தப் பணம் கிடைத்தால் ஈரானின் நாணயமான ‘ரியால்’ மதிப்பு வீழ்ச்சியடைவதை தடுக்கலாம்.அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும். நாட்டின் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதி உதவும்.

அதேநேரம், இந்த முடக்கப்பட்ட பணம் கிடைப்பது ஈரானுக்கு ஒரு தற்காலிக மருந்தாக மட்டுமே இருக்கும். ஈரானின் ஒட்டுமொத்த பொருளாதார சிக்கல்களும் தீர வேண்டுமானால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *