International
oi-Vigneshkumar
டெல்லி: வளைகுடாவில் நிலவும் பதற்றம் பல மாதங்கள் கழித்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது பிராந்திய போராக மாறும் அச்சமும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதற்கிடையே இந்தியாவை நோக்கி வந்த கப்பல் ஒன்று பாகிஸ்தானுக்கு அருகே தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்கப்பட்ட அந்த கப்பல் எது.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
வளைகுடாவை சுற்றிலும் கடந்த சில காலமாகவே பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான நேரடி தாக்குதல்கள் குறைந்துள்ள போதிலும், இன்னும் பிராந்திய அமைதி முழுமையாக திரும்பவில்லை. இதனால் அங்கு பதற்றமான ஒரு சூழலே தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் தொடர்கிறது. மீண்டும் அப்படியொரு சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்
ஏமனில் பாப் அல்-மண்டேப் ஜலசந்தியில் செவ்வாய்க்கிழமை எகிப்து நிறுவனங்களுக்கு சொந்தமான திஹாமா என்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக ஏமன் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த பாகிஸ்தானை சேர்ந்த மூவர் மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த ஒருவர் என 4 பேர் உயிரிழந்தனர். மேலும், கப்பல் மீதான தாக்குதலுக்குப் பிறகு மீட்பு பணிக்காக வந்தபோது மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹவுதி படையை சேர்ந்த இரண்டு மீட்பு பணியாளர்களும் கொல்லப்பட்டதாக ஏமன் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
காயம்
இந்த சம்பவத்தில் 7 கப்பல் பணியாளர்கள், 2 கடலோர காவல்படை வீரர்கள் மற்றும் ஒரு மீட்புப் படை வீரர் என மொத்தம் 10 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் போர் தொடங்கிய பின்னர், கப்பல்கள் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் ஏற்படும் முதல் உயிரிழப்பு இதுவாகும் செங்கடல் வழியாக சவுதி ராணுவ உபகரணங்களை எடுத்து சென்ற கப்பல் ஒன்றை தாக்கியதை ஹவுதி படையினரும் ஒப்புக்கொண்டனர்.
இந்தியாவை நோக்கி வந்த கப்பல் மீது தாக்குதல்
அதேபோல ஓமன் வளைகுடா பகுதியில் பனாமா நாட்டை சேர்ந்த கண்டெய்னர் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த கப்பல் ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை மீறியதாகவும், அதை நிறுத்துமாறு பலமுறை எச்சரிக்கப்பட்டது. ஆனால் கப்பல் தொடர்ந்து பயணித்ததால், அமெரிக்க ராணுவம் ஏவுகணைகளை ஏவி அதன் இஞ்சினை செயலிழக்க செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 131 கி.மீ தொலைவில் தாக்கப்பட்டதாக கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த கப்பல் சமீபத்தில் தான் மும்பைக்கு வந்து சென்றிருந்தது. அந்த கப்பல் இந்தியாவை நோக்கி வந்து கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த தகவல்களை உறுதி செய்ய முடியவில்லை.
நிலைமை மோசம்
ஹவுதி தாக்குதல்கள் மற்றும் கடல்வழி முற்றுகைகளால் செங்கடல் மற்றும் பாப் அல்-மண்டேப் வழியாக செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது. கடந்த வாரம் பாப் அல்-மண்டேப் வழியாக தினசரி சராசரியாக 32 கப்பல்கள் மட்டுமே சென்றுள்ளன. முற்றுகைக்கு முன்பு இந்த எண்ணிக்கை சுமார் 50ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது..
ஹார்முஸ் ஜலசந்தியில் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. திங்களன்று வெறும் 6 கப்பல்கள் மட்டுமே அந்த வழியாக சென்றுள்ளன. போருக்கு முன்பு தினசரி சுமார் 130 முதல் 140 கப்பல்கள் வரை சென்ற இந்த முக்கிய ரூட்டில் இப்போது கப்பல் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது.