கேரள மாநிலத்தின் பெயரை `கேரளம்” என மாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடங்கி பல்வேறு நடவடிகைகள் பூர்த்தியடைந்த நிலையில் நேற்று மக்களவையிலும் கேரளம் பெயர் மாற்றம் சம்பந்தமான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இனி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு பெயர் மாற்றம் முழுமையாக அமலுக்கு வரும். பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து, ஆங்கிலத்தில் ‘கவர்ன்மென்ட் ஆஃப் கேரளம்’ (Government of Keralam) என்றும், மலையாளத்தில் ‘கேரளம் சர்க்கார்’ என்றும் மாற்றப்பட வேண்டும். கேரள சட்டப்பேரவை இனி ‘கேரளம் சட்டப்பேரவை’ என்று அழைக்கப்படும். தலைமைச் செயலகம் முதல் கிராம அலுவலகங்கள் வரையிலான அனைத்து அரசு அலுவலகங்களின் பெயர்ப்பலகைகள், முத்திரைகள், லெட்டர் பேடுகள், இணையதளங்கள், மொபைல் செயலிகள், மற்றும் லோகோக்கள் என அனைத்தும் மாற்றப்பட வேண்டியிருக்கும்.

சான்றிதழ்கள், அரசிதழ்கள், ரேஷன் கார்டுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் புதிய பெயரில் அச்சிடப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்களின் பெயர்களும் மாறும். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பெயருடன் கேரளம் என சேர்க்கப்படும். பல்வேறு ஆணையங்கள் மற்றும் நலநிதிகளின் பெயர்களும் மாற்றப்படும். பெயர் மாற்றத்துக்காக பெருமளவில் நிதிச் சுமை ஏற்படும் என கருதப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் பெயர்களை மாற்றுவதற்குச் சட்டத் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும்.