தேசிய அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்களிப்பும் அதன் கூட்டணி வரலாறும் இந்திய அரசியல் களத்தில் மிகவும் முக்கியமானவை.
“மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற முழக்கத்தை முதன்மையாகக் கொண்டு, ஒரு மாநிலக் கட்சியாக இருந்தாலும் டெல்லியின் அதிகாரப் போக்கைத் தீர்மானிக்கும் சக்தியாக திமுக பலமுறை உருவெடுத்திருக்கிறது.
பேரறிஞர் அண்ணா தொடங்கி, கலைஞர் கருணாநிதி வழியாக, தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின் வரை இந்தக் கூட்டணிப் பயணம் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கிறது.

திமுகவின் அரை நூற்றாண்டு கால தேசியக் கூட்டணிப் பயணம் என்ன? இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
ஆரம்ப கால தடம் மற்றும் இந்திரா காந்தியுடனான உறவு (1967 – 1980)
1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி அண்ணா தலைமையில் திமுக முதன்முறையாக அரியணை ஏறியபோது, அது தேசிய அளவில் ஒரு பிராந்திய அலையை உருவாக்கியது. அப்போது ராஜாஜியின் சுதந்திரா கட்சி மற்றும் இடதுசாரிகளுடன் அண்ணா மாநில அளவில் கூட்டணி அமைத்திருந்தார்.
அண்ணாவின் மறைவுக்குப் பின், 1969-ல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் சிறுபான்மை அரசுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தந்து, தேசிய அரசியலில் தங்களின் முதல் முக்கிய முத்திரையை கலைஞர் கருணாநிதி பதித்தார்.