“இனி இப்படிச் செய்யாதீங்க” – ரீல்ஸ் வெளியிட்ட தவெக எம்எல்ஏ; எச்சரித்த கேரள வனத்துறை; என்ன நடந்தது? | Kerala Forest Department warns TVK MLA who posted a Reels video

Spread the love

முல்லை பெரியாறு அணையின் நீரை தமிழகப் பகுதிக்குத் திறந்து விடுவதற்கான மதகு தேனி மாவட்டத்தில் உள்ள தேக்கடி பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தேனி மாவட்ட எம்.எல்.ஏக்கள், எம்பி மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கூட்டாக தேக்கடியில் உள்ள மதகிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.

இந்த வருடமும் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்காக கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா, தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் நீர்வளத் துறை அதிகாரிகள் ஆகியோர் தேக்கடி பகுதிக்குச் சென்றனர்.

அப்போது பெரியகுளம் எம்.எல்.ஏ சபரி ஐயங்கரன் ட்ரோன் பறக்கவிட்டு வீடியோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தேக்கடி பகுதி பெரியார் புலிகள் சரணாலயப் பகுதிக்குள் வருவதால் அங்கு ட்ரோன் பறக்க விடுவது தடைசெய்யப்பட்ட நிலையில்  எம்.எல்.ஏ-வின் ட்ரோன் வீடியோ காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கேரளா வனத்துறையினர் மற்றும் கேரளா காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்

தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன்

தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன்

ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தர்நாத் முல்லை பெரியாறு அணையில் ட்ரோன் பறக்க விட்டதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்து ட்ரோனைப் பறிமுதல் செய்தனர் கேரளா வனத்துறையினர்.

மேலும் இதைக் காரணம் காட்டி அணைக்குப் பாதுகாப்பில்லை எனப் பத்திரிகையாளர்கள் உட்பட பொதுமக்கள் யாரும் அணைக்குள் வரவும் தடை விதித்தனர். தற்போது வரை தமிழக ஷெட்டர் உள்ள பகுதியான தேக்கடி வரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சென்று வர அனுமதிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தவெக எம்.எல்.ஏ-வின் ரீல்ஸ் வீடியோவால் தேக்கடிக்குள் செல்லும் உரிமையும் பறிபோகுமே என்கிற அச்சமும் எழுந்தது.

இந்நிலையில் கேரள வனத்துறையிலிருந்து, தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பட்டது.

அதில், “இவ்விவகாரம் இரு மாநிலங்களுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கும் வகையில் இருப்பதால் வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என முடிவு செய்ய வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். அதே நேரத்தில் பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில் முன் அனுமதி பெறாமல் ட்ரோன் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது, இனி வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை ஐந்து மாவட்டங்களுக்கான நீராதாரம். அந்த மாதிரியான இடங்களுக்குச் செல்லும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்துடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் எனக் கோரிக்கையும் எழுந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *