“இனி ஜாதி கிடையாது”.. பள்ளி அட்மிஷன் விண்ணப்பத்தில் அதிரடி நீக்கம்! முதல்வர் அறிவிப்பு | Himachal Pradesh removes caste column from school admission forms

Spread the love

India

oi-Nantha Kumar R

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் இனி மாணவர்களின் ஜாதியை கேட்கும் வகையில் தனி அட்டவணை எதுவும் இருக்க கூடாது என்று அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு உத்தரவிட்டார். அவரது உத்தரவுக்கு வரவேற்புகள் குவிந்து வருகிறது.

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக சுக்விந்தர் சுகு உள்ளார். இந்நிலையில் தான் இன்று இமாச்சல பிரதேசத்தில் பட்டியலின நல வாரிய அதிகாரிகளின் மீட்டிங் நடந்தது.

Himachal Pradesh removes caste column

இந்த மீட்டிங்கிற்கு முதல்வர் சுக்விந்தர் சுகு தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”மாநிலத்தில் ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டை நீக்க வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. சகோதரத்துவம் மற்றும் சமத்துவ உணர்வை ஊக்குவிப்பதில் அரசு உறுதியாக உள்ளது.

பள்ளி விண்ணப்ப படிவத்தில் மாணவர்களின் ஜாதியை அறியும் வகையில் உள்ள அட்டவணை நீக்கப்படும். இது ஜாதி அடிப்படையில் மாணவர்கள் இடையே ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை போக்க உதவும். அதேவேளையில் பள்ளிகளில் பயிலும் பட்டியலின மாணவ-மாணவிகளுக்கு தொடர்ந்து அரசு நலத்திட்டங்கள் கிடைக்கும். இதில் எந்த வேறுபாடும் காட்டப்படாது.

பட்டியலினத்தவர்களுக்காக புதிதாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. உயர்கல்வியில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுகளுக்கு ரூ.20 லட்சம் வரை ஒரு சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம் நிதி நிலைமையை காரணம் காட்டி மாணவர்கள் படிப்பை நிறுத்துவது தடுக்கப்படும். பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அரங்கேறும் வன்முறை சம்பவங்களை தடுக்க அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் தற்போது பள்ளி விண்ணப்ப படிவங்களின் மாணவ-மாணவிகளின் ஜாதிகளை நிரப்பும் வகையில் தனி அட்டவணை இருக்கும். ஆனால் வரக்கூடிய கல்வியாண்டில் இருந்து இந்த அட்டவணையை நீக்க அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு நடவடிக்கை எடுத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *