International
oi-Nantha Kumar R
டெஹ்ரான்: அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் 3வதுமுறையாக ஈரான் மீது அமெரிக்கா இன்று தாக்குதலை நடத்தி உள்ளது. அதன்படி ஈரான் கடற்படையின் பல்லை பிடுங்கி வலுவை குறைக்கும் வகையில் மொத்தம் 140 இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இருநாடுகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் சரக்கு கப்பல்களை தாக்குவதாக கூறி அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது.
கடந்த 7 நாட்களில் 2 முறை ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இன்று 3வது முறையாக அமெரிக்கா புதிய தாக்குதலை தொடங்கியது.

ஹார்முஸ் ஜலசந்தியில் ‘சைப்ரஸ்’ நாட்டின் கொடியுடன் பயணித்த எம்/வி ஜிஎஃப்எஸ் கேலக்ஸி எனும் கண்டெய்னர் கப்பல் மீது நேற்று ஈரான் தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா கோபமடைந்தது. அதுமட்டுமின்றி ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதனால் ஆத்திரம் தாங்காத அமெரிக்கா, ஈரான் மீது புதிய தாக்குதலை தொடங்கியது. அதன்படி தற்போது ஈரானின் 140 இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது.
ஈரானில் உள்ள போர் விமானங்களை கண்காணிக்கும் ரேடார் அமைப்புகள், ஏவுகணை சேமிப்பு குடோன்கள், ட்ரோன் சேமிப்பு குடோன்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன்களை அனுப்ப பயன்படும் தளங்கள் மற்றும் சரக்கு கப்பல்களை தாக்க ஈரான் பயன்படுத்தும் இடங்கள் உள்பட 140 இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இதனை அமெரிக்காவின் CENTCOM உறுதி செய்துள்ளது.
CENTCOM என்பது மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா சார்பில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் கட்டளை மையமாகும். ஈரான் மீதான புதிய தாக்குதல் பற்றி CENTCOM கூறியுள்ளதாவது: ”போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் மூலம் ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் 140 இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள், வெடிமருந்து சேமிப்பு குடோன்கள், தகவல் தொடர்பு மையங்கள், கடல்சார் போக்குவரத்தை கண்காணிக்கும் ரேடார் மையங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சுதந்திரமாக வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை குறைக்கவும், ஈரானின் கடல்சார் தாக்குதலுக்கான வலிமையை குறைப்பதை நோக்கமாக வைத்து இந்த தாக்குதல் நடத்தபப்ட்டுள்ளது. அமெரிக்காவின் தலைமைத் தளபதியின் உத்தரவின் பேரில் இந்த வாரத்தில் 3வது தாக்குதலை நாங்கள் நநட்தி உள்ளோம். இந்த 3 தாக்குதல்களின் வழியாக மொத்தம் ஈரானின் 300 இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.