இம்சை அரசன் 23-ம் புலிகேசி : அரியணையில் ஒரு கோமாளி! | ஆதி தாமிரா | `சினி’ஸ்கோப் 14 | a-special-series-on-imsai-arasan23m-pulikesi-episode-14

Spread the love

வடிவேலு, நாசர் போன்று பெரிய பாத்திரங்கள் செய்தவர்கள் மட்டுமல்லாது, சிறு காட்சிகளில் வந்துபோன நடிகர்களும் கூட இந்தப் படத்தின் அடிப்படை உணர்வை கச்சிதமாக உள்வாங்கி நடித்திருந்தனர். நாசர் முற்றிலும் புதுமையான ஒரு காமிக்கல் முகபாவத்தோடு சங்கிலிமாயனைக் கொண்டு வந்தார். இளவரசுவுக்கு, புலிகேசிக்கு ஜால்ரா அடிக்கும் மங்குனிப்பாண்டியன் பாத்திரம். ஸ்ரீமனுக்கு தளபதியாக நாட்டுக்காக சிந்திக்கும் ஒரு நல்ல கதாபாத்திரம்.

விஎஸ்.ராகவன், நாகேஷ், மனோரமா, எம்என் ராஜம், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற பழம்பெரும் நடிகர்களும் கேமியோ ரோல்களில் படத்துக்குச் சிறப்புச் சேர்த்திருந்தனர். மோனிகா, தேஜாஸ்ரீ, மனோபாலா, தியாகு, முத்துக்காளை, சிங்கமுத்து, போண்டாமணி, சிசர் மனோகர் போன்ற பலரும் நடித்திருந்தார்கள்.

வடிவேலுவுக்கு ஹீரோவாக இது முதல் படம். இதில், 23-ம் புலிகேசியாகவும், உக்கிரபுத்தனாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார். வடிவேலு தன் காலம் முழுதும் ஒரு நகைச்சுவை நடிகராகவும், ஒரு எண்டர்டெயினராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் என்றாலும் அவர் முதன்மையாக எல்லாக் கதாபாத்திரங்களையும் சிறப்பாக ஏற்று நடிக்கக்கூடிய ஒரு தேர்ந்த நடிகர். பிற்காலத்தில் அவர் நடித்த மாமன்னன், மாரீசன் போன்ற படங்கள்தான் அதற்கு உதாரணம். அதன் முன்னோட்டமாகவே இந்தப் படத்தின் உக்கிரபுத்தன் பாத்திரம் அமைந்திருந்தது.

புலிகேசியாக ஒருபுறம் அவரது கிரவுண்டில் அடித்து ஆடிக்கொண்டே, இன்னொரு புறம் ஒரு ஹீரோவாக, பொறுப்பான பாத்திரத்தில், சீரியஸான காட்சிகளையும் மிகச்சிறப்பாகச் செய்திருந்தார். தொடர்ந்து இன்றுவரை அவ்வப்போது தெனாலிராமன், எலி, கேங்கர்ஸ் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தாலும், காமெடியில் இம்சை அரசனைப் போன்ற ஓர் இம்பாக்ட்டை அவரால் நிகழ்த்த முடியவில்லை.

சமீபத்தில், இந்தப் படத்தின் தொடர்ச்சியாக உருவாகவிருந்த, ’24-ம் புலிகேசி’ படம் கைவிடப்பட்டிருக்கிறது. அதற்கான காரணம் வடிவேலுவாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பதை செய்திகளின் மூலம் ஊகிக்க முடிகிறது. ஒரு சிறந்த நடிகர் முடிவெடுக்கும் திறனிலும், மற்ற விசயங்களிலும் சிறப்பானவராக இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆனால், இழப்பு ரசிகர்களாகிய நமக்குதான்.

ஒரு நல்ல அரசன் எப்படி இருக்கக்கூடாது என்பதைக் குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் காட்டிச் சிரிக்க வைத்ததுதான் இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் வெற்றி.

பொறுப்பற்ற ஆட்சி, வெளிநாட்டு சக்திகளுக்குக் அடிபணியும் கோழைத்தனம், சாதிப் பிரச்சினை, கல்வியின் முக்கியத்துவம், கருத்துச் சுதந்திரம் என சமூகத்தின் பல பிரச்சினைகளை இந்தப்படம் நகைச்சுவைக்குள் இயல்பாகப் பொதிந்து வைத்திருக்கிறது. அதனால்தான், இந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி, வெறும் காமெடியனாக மட்டுமே காலத்தில் கரைந்துபோய்விடாமல், தனக்கென ஒரு தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்.!

(தொடரும்)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *