மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.
ஆனாலும் அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ‘நான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன், தேர்தலில் சதி நடந்துள்ளது. சதியில் பிரதமருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் பங்கிருக்கிறது’ எனச் சொல்லி வருகிறார்.
தேர்தலுக்கு முன் எஸ்.ஐ ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின் போதே அதை மம்தா எதிர்த்தது நினைவிருக்கலாம்.
இந்தப் பின்னணியில் மம்தாவின் தொகுதியான பவானிப்பூர் தொகுதியின் எஸ்.ஐ ஆர் பணியின் அப்சர்வராக இருந்த 12 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சி.முருகனும் ஒருவர்.
மேற்கு வங்க கேடர் அதிகாரியான இவரிடம் பேசினோம்.

‘’எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் ஆரம்பகட்ட பணியான வீடு வீடாகப் போய் படிவம் கொடுத்து விபரங்கள் வாங்கி தகுதியில்லாதவங்களை நீக்குகிற அந்தப் பணியே முறையா நடக்கலை.
நான் அப்சர்வரா போனதுமே கண் கூடா இதைப் பார்த்தேன்.
ஏ.எஸ்.டி.டி.னு சொல்வாங்க, அதாவது ஆப்செண்ட் ஆனவங்க, ஷிஃப்ட் ஆனவங்க, டூப்ளிகேட், டெட் அதாவது இறந்தவங்க. இந்த நாலு வகையில தகுதியில்லாத வாக்காளர்கள் குறித்த விபரங்கள் கலெக்ட் செய்யப் படணும். ஆனா பூத் லெவல் அலுவலர்கள் இதையே சரியா செய்யலை. இறந்து போயிட்டாங்கன்னா அந்த விபரத்தை வீட்டுக்காரங்க சொன்னாலே போதும்னு சொன்னது தேர்தல் ஆணையம். ஆனா இவங்க இறப்பு சான்றிதழ் இல்லைனு அதை நீக்காம விட்டிருந்தாங்க.