தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதிகளில் தவெக வெற்றிபெறவில்லை. அதனால் தவெக தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால், காங்கிரஸ் தன் முழு ஆதரவையும் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநரோ, பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையிலான ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை கேட்டிருக்கிறார். இதனால் தவெக தலைவர் விஜய் இன்று பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்டக் கட்சிகள் ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்திருக்கின்றன. திமுக தரப்பிலிருந்து, ‘ஆளுநருக்கு எதிராக இப்போதாவது தவெக தலைவர் ஏதாவது பேசுவாரா?’ என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தன் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில், “2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜகவை கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் நாளை (08.05.2026) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகில் நாளை (08.05.2026) காலை 11:00 மணியளவில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள்- முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர்கள், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சர்க்கிள், வட்ட தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள், பெருநகர சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.