ஜொமாட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் தீபிந்தர் கோயல் உணவு விநியோகத் துறையில் ஏற்படுத்திய தாக்கத்தைத் தொடர்ந்து, தற்போது தொழில்நுட்ப உலகில் “டெம்பிள்’ (Temple) என்ற பெயரில் ஒரு புதிய புரட்சியைத் தொடங்கியுள்ளார்.
இது பார்ப்பதற்கு ஒரு சிறிய கிளிப் போல இருந்தாலும், மனித மூளையின் ஆரோக்கியத்தை மிகத் துல்லியமாகக் கண்காணிக்கும் ஒரு அதிநவீன அணியக்கூடிய சாதனம் ஆகும்.
பொதுவாக நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் வாட்ச்கள் இதயத் துடிப்பை மட்டும் அளவிடும், ஆனால் இந்த ‘டெம்பிள்’ சாதனம் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை ஆய்வு செய்கிறது. நாம் அமரும் விதம், உடல் அசைவுகள் மற்றும் புவிஈர்ப்பு விசை போன்றவை நமது மூளையின் சுறுசுறுப்பை எந்த அளவிற்குப் பாதிக்கின்றன என்பதை இது கண்டறிந்து சொல்கிறது.

இந்தத் தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டமாக, தற்போது வெறும் 100 சாதனங்கள் மட்டுமே கொண்ட ‘ஏர்லி அக்சஸ்’ (Early Access) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்த விரும்புவோர் தற்போது விண்ணப்பிக்கலாம்.
ஆனால், இந்த வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்படாது; விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் படைப்பாளிகள் போன்ற மிக முக்கியமான துறைகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.