அதன் தாக்கம் மிகவும் பரந்தது. இன்று கணவரின் உழைப்பிற்கும், நாளை குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும் இல்லத்தரசிகளே அடித்தளமாக விளங்குகின்றனர்” எனத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.
தீர்ப்பை எழுதிய நீதிபதி சஞ்சய் கரோல், “ஒரு இல்லத்தரசியின் மரணம் என்பது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு மட்டுமேயான இழப்பல்ல. மகளை இழந்து தவிக்கும் அவர்தம் பெற்றோர், வீட்டில் உணவு, மருந்து, மருத்துவமனை உதவிகள் மற்றும் காலை நேரத்து தேநீர் என எல்லாவற்றிற்கும் அந்தப் பெண்ணையே சார்ந்திருக்கும் மாமனார்-மாமியார் என ஒட்டுமொத்த குடும்பமும் இதனால் எல்லையற்ற துயரத்திற்கு ஆளாகிறது.
இத்தகைய உணர்வுப்பூர்வமான இழப்புகளை வெறும் கணிதக் கணக்கீடுகளால் மட்டும் மதிப்பிட்டுவிட முடியாது. இனிவரும் காலங்களில், விபத்தில் இல்லத்தரசிகள் உயிரிழக்க நேரிட்டால், Loss of domestic care என்ற தலைப்பின் கீழ் விபத்து தீர்ப்பாயங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் கூடுதலாக ரூ.30,000 தனித்தொகையாக வழங்க வேண்டும்.

மேலும், இல்லத்தரசி வேலைக்குச் செல்பவராக இருந்தால், அவர் ஈட்டும் மாதாந்திர வருமானத்துடன் இந்த ரூ.30,000 கூடுதலாகச் சேர்க்கப்படும். சம்பாதிக்கும் நபர்கள் இல்லத்தரசிகளைச் சார்ந்து வாழ்கிறார்களே தவிர, இல்லத்தரசிகள் யாரையும் சார்ந்து இல்லை என்பதே நிதர்சனம். அதனால்தான் “Housewife’ என்ற சொல் மாற்றப்பட்டு, பன்முகத்தன்மையைக் குறிக்கும் ‘Homemaker’ என்ற தகுதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பெண்களின் பங்களிப்பு என்பது வெறும் உயிரியல் ரீதியானது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்தும் ‘மனித மூலதனத்தை’ உருவாக்குவதில் அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. குழந்தையின் முதல் ஆசிரியராகத் திகழும் தாய், ஒழுக்கம், பண்பாடு மற்றும் கலாசார விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறார்.