International
oi-Mani Singh S
தெஹ்ரான்: சர்வதேச எண்ணெய் போக்குவரத்தின் உயிர் நாடி போல இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்று டிரம்ப், ஈரானுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், ஈரானை போரில் வீழ்த்தி, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க பகுதியாக அறிவிப்பேன் என்று டிரம்ப் பேசியுள்ளார். டிரம்பின் இந்த பேச்சுக்கு ஈரான் கோபமாக பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் போர் வெடித்தது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின. பதிலுக்கு ஈரானும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் தீவிரம் அடைந்தது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடுவதாக அறிவித்தது.

டிரம்ப் அதிரடி அறிவிப்பு
சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் போக்குவரத்து வழித்தடமாக ஹார்முஸ் ஜலசந்தி இருப்பதால், சர்வதேச அளவில் எண்ணெய் போக்குவரத்து முடங்கியது. ஈரான் – அமெரிக்கா போரை முடிவுக்கு கொண்டு வர ஏதுவாக போடப்பட்ட ஒப்பந்தமும் முறிந்துள்ளது. இதனால், மீண்டும் வளைகுடாவில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறி வருகிறார்.
ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதும் மூடுவதும் எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்று ஈரான் கூறி வருகிறது. இந்த சூழலில், “ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிக்க உள்ளேன். இந்த முற்றுகை ஊடுருவ முடியாத ஒன்றாக இருக்கும். இது உலக நாடுகளுக்கு செய்யப்படும் ஒரு சிறந்த சேவை இது” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்புக்கு ஈரான் பதிலடி
டிரம்பின் இந்த அறிவிப்பால் ஈரான் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. உடனே ஈரான் வெளியுறவு அமைச்சர் காசெம் காரிபடி டிரம்ப்புக்கு காட்டமான பதிலடியை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “ஹார்முஸ் ஜலசந்தியை ஒரு பதிவு மூலமோ, விமானம் தாங்கி கப்பல் மூலமோ கைப்பற்றிவிட முடியாது. அச்சுறுத்தல்களுக்கு ஈரான் பயப்படாது” என்றார். டிரம்பின் இந்த புதிய அறிவிப்பும் ஈரானின் பதிலடியும், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கும் விதமாக அமைந்துள்ளது.
சர்வதேச சட்டவிதிகள் சொல்வது என்ன?
ஹார்முஸ் ஜலசந்ந்தி வழியாகவே உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் நடைபெறுகிறது. இதனால், அந்த ரூட்டில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது சர்வதேச அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரானை பொருளாதார ரீதியாக முடக்க, ஈரானின் துறைமுகங்களையும் அமெரிக்கா முடக்கியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியை தங்கள் நாடு பாதுகாக்கும் எனவும், அதற்கு பதிலாக அந்த வழியை கடக்கும் கப்பல்களுக்கு 20 சதவீதம் கட்டணம் வசூலிக்க முடியும் என்றும் டிரம்ப் கடந்த மாதம் யோசனை ஒன்றை முன்வைத்தார். ஆனால், அமெரிக்கா ஒரு வேளை இதை செயல்படுத்தினாலும் கூட சர்வதேச சட்ட விதிகளின் படி, அது சட்டவிரோதமாகவே அமையும் என்று சர்வதேச நிபுணர்கள் கூறினர். ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்றுவோம் என டிரம்ப் பேசுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இதுபோல பலமுறை இப்படி கூடி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

