“ஈரானுக்கு அமெரிக்கா 300 பில்லியன் டாலர் வழங்குகிறதா?" – அமெரிக்கத் துணை அதிபரின் விளக்கம் என்ன?

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மறுசீரமைப்பு நிதியாக ஈரான் நாட்டிற்கு அமெரிக்கா 300 பில்லியன் டாலர்களை வழங்கவுள்ளதாக வெளியான தகவல்களை அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பிரபல ஊடகவியலாளர் மெகின் கெல்லி தொகுத்து வழங்கிய “தி மெகின் கெல்லி ஷோ” (The Megyn Kelly Show) நிகழ்ச்சியில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கலந்துகொண்டார். அவரிடம் ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் குறித்தப் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

ஜே.டி. வான்ஸ்
ஜே.டி. வான்ஸ்

அந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், “ஈரானுக்கு மறுசீரமைப்பு நிதியாக 300 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படவிருப்பதாக வெளியான செய்தி உணமையல்ல. அதற்குப் பதிலாக, இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த விதிமுறைகளை ஈரான் முறையாகக் கடைப்பிடித்தால், பிற நாடுகள் ஈரானில் முதலீடு செய்ய அனுமதிக்கும் திட்டமே எங்களிடம் இருக்கிறது.

ஈரான் தனது அணுசக்தி மற்றும் பிராந்தியச் செயல்பாடுகள் குறித்த விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொண்டால், அந்நாட்டில் முதலீட்டை ஊக்குவிக்கவும் பணப்புழக்கத்தை ஏற்படுத்தவும் ஏதுவாக, அந்த இஸ்லாமியக் குடியரசு மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும்

உதாரணமாக, இப்பிராந்தியத்தில் நமக்கு மிகச் சிறந்த நட்பு நாடுகளில் ஒன்றாகத் திகழும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE), ஈரானில் உள்ள ஒரு அணுமின் நிலையத்தில் முதலீடு செய்ய விரும்புகிறது என வைத்துக்கொள்வோம். உலகளாவிய நிதி அமைப்பில் தற்போதுள்ள சில தடைகளை நாம் நீக்கினாலன்றி, அவர்களால் அதைச் செய்ய முடியாது. ஆனால், ஈரானியர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ளாத வரை, அமீரகத்தினர் அங்கு முதலீடு செய்வதை அமெரிக்கா அனுமதிக்கப்போவதில்லை.

எனவே, ‘ஈரானுக்கு அமெரிக்கா நேரடியாக பணம் கொடுக்கிறது’ என்று கூறுவது முற்றிலும் உண்மையல்ல. அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டால், அந்நாட்டை மறுகட்டமைக்கவும் மக்களின் செழிப்பை மேம்படுத்தவும் பிற நாடுகள் முதலீடு செய்ய நாங்கள் வழியமைப்போம்” என்று தெளிவுபடுத்தினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *