'எல்லாருக்காகவும் திறந்திருக்கும் கதவு!' – தலைமைச் செயலகத்தில் கவனம் ஈர்க்கும் அமைச்சர் வன்னிஅரசு!

Spread the love

தலைமைச் செயலகத்தில் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவின் அறை, ஒரு அமைச்சரின் அறைக்குரிய நடைமுறைகளை கடந்து விளிம்பு நிலை மக்கள் எளிதில் அணுகக்கூடியதாக இருப்பதாக ஒரு பேச்சு கோட்டை வட்டாரத்தில் அடிபட தொடங்கியிருக்கிறது.

அமைச்சர் வன்னி அரசுவின் அறை
அமைச்சர் வன்னி அரசுவின் அறை

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் தளத்தில் அமைந்திருக்கிறது சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவின் அறை. மாலை 4 மணிக்கு மேல் பார்வையாளர் நேரம் என அறைக்கு வெளியேயே எழுதி ஒட்டப்பட்டிருக்கிறது. நாம் இரவு 8 மணிக்கு மேலாக அமைச்சரின் அறைக்கு சென்றிருந்தோம்.

நேற்று எம்.எல்.ஏக்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்ததால் அதை முடித்துவிட்டு 6 மணிக்கு மேல்தான் அமைச்சர் வந்திருக்கிறார். நாம் அமைச்சரின் அறையை நோக்கி செல்லும் போதே வாயிற் கதவு வரைக்கும் கூட்டம் நின்று கொண்டிருந்தது. காத்திருப்போர் அறையிலும் கூட்டம் நிரம்பியிருந்தது. இதில் ஆச்சர்யமாக இருந்தது என்னவெனில், அமைச்சரின் அறைக்கு உள்ளேயும் வெளியேயும் அவரின் உதவியாளர்கள் யாருமே வருகின்ற எந்த மக்களையும் நிறுத்தி கேள்வி கேட்கவே இல்லை. எல்லா அமைச்சர்களின் அறைகளிலுமே குறைந்தபட்சமாக நான்கைந்து பேராவது பார்வையாளர்களை ஒழுங்குப்படுத்தவென இருப்பார்கள்.

அமைச்சர் வன்னி அரசு
அமைச்சர் வன்னி அரசு

முடிந்தளவுக்கு கூட்டத்தை குறைக்க வேண்டுமென்பதுதான் இவர்களின் வேலையாக இருக்கும். அதனால் அமைச்சர் அதிகாரிகளுடன் மீட்டிங்கில் இருக்கிறார், வெளியே வேலையாக சென்றிருக்கிறார். ‘அமைச்சரை இப்போது பார்க்க முடியாது’ எனக் கூறி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தவே நினைப்பர். அமைச்சரை தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள் அல்லது யாருடைய சிபாரிசின் பேரிலாவது வருபவர்களே அமைச்சர்களை இலகுவாக சந்திக்க முடியும். ஆனால், அப்படியான எந்த படோபடங்களும் கெடுபிடிகளும் அமைச்சர் வன்னி அரசுவின் அறையில் இல்லை. நாம் செல்லும் போது யார் வேண்டுமானாலும் அவரின் அறைக் கதவை திறந்து உள்ளே செல்லலாம் எனும் நிலையே இருந்தது. உள்ளேயும் அவ்வளவு மக்கள் மனுக்களோடு காத்திருந்தனர்.

மேலும், அவர் எந்த மனுவையுமே இருக்கையில் அமர்ந்துகொண்டு வாங்குவதில்லை. அறையில் எத்தனை பேர் இருந்தாலும் அத்தனை பேரிடமும் நின்றபடியே மனுவை வாங்கி மக்களின் கோரிக்கைகளை எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையாக கேட்டு உதவியாளரை அழைத்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்ப சொல்கிறார். அதிகாரிகளிடம் பேச வேண்டியதாக இருந்தால் உடனடியாக அழைத்து பேசுகிறார். மனு எங்கோ ஒரு மூலையில் தூக்கி வீசப்படுமோ என்ற தயக்கத்தில் வரும் மக்களுக்கு இப்படியான அணுகுமுறை பெரும் நம்பிக்கையை கொடுக்கிறது.

அமைச்சர் வன்னி அரசு
அமைச்சர் வன்னி அரசு

நேற்று மாஞ்சோலையிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அமைச்சரை சந்திக்க வந்திருந்தனர். ஒவ்வொருவராக பார்த்துவிட்டு இவர்களை இரவு 9:30 மணிக்கு மேல்தான் சந்தித்தார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவர்களின் பிரச்னைகளை கேட்டுவிட்டு, ‘முதல்வரை சந்திக்க முயற்சி செய்யலாம். நீங்கள் தலைவர் திருமாவையும் கம்யூனிஸ்ட் தோழர்களையும் கூட ஒரு முறை பாருங்கள். விரைவில் நல்லது நடக்கும்’ எனக் கூறி நம்பிக்கையோடு அனுப்பி வைத்தார். அவர்கள் கிளம்பும் போதே மணி 10 யை நெருங்கியிருந்தது. அதன்பிறகும் கிட்டத்தட்ட 20 பேர் அவரின் அறையில் கூடியிருந்தனர். அத்தனை பேரையும் பார்த்து பொறுமையாக குறைகளை கேட்டுவிட்டுதான் கிளம்பியிருக்கிறார்.

கோட்டை வட்டாரத்தை சேர்ந்த சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம், ‘தன்னை சந்திக்க வரும் எந்த மக்களும் எந்த கெடுபிடிக்கும் உள்ளாகக் கூடாதென நினைக்கிறார். அதனால்தான் இரவு 11 மணி மேல் வரை நின்று பொறுமையாக அத்தனை பேரையும் சந்தித்துவிட்டு செல்கிறார். அமைச்சர் 11 மணி வரை இருப்பதால் மக்களும் இரவு 8 மணிக்கு மேல் கூட அவசர பிரச்னைகளுக்காக நாமக்கல் கவிஞர் மாளிகையை நோக்கி ஓடி வருகின்றனர். ‘எப்படி சார் இரவு நேரங்களில் மக்களை அனுமதிப்பது?’ என காவலர்களே கேட்கிறார்கள். ஆனால், அமைச்சரோ ‘என்னை பார்க்க வந்தால் நான் இருக்கும் வரை எந்தத் தடையும் இல்லாமல் அனுப்பிதான் ஆக வேண்டும்’ என உறுதியாக கூறிவிட்டார். மேலும், ஒரு குழுவாக மக்கள் வந்தால் அவர்களின் பிரதிநிதிகளை மட்டுமே அமைச்சரை சந்திக்க அனுமதிப்பார்கள்.

அப்படியில்லாமல் யாரெல்லாம் அமைச்சரை பார்த்து பேச விரும்புகிறார்களோ அத்தனை பேரையும் எந்த தடங்கலும் இல்லாமல் அனுப்ப வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்’ என்கின்றனர்.

எல்லோருக்கும் திறந்திருக்கும் கதவாக மாறியிருக்கிறது அமைச்சர் வன்னி அரசுவின் அறை. எளிய மக்களுக்கு அந்த கோட்டையின் பிரமாண்டமே பெரும் தயக்கத்தை கொடுக்கும். அணுகுவதற்கு பெரும் சிரமம் கொண்ட இடமாக தோற்றமளிக்கும். அதை அமைச்சர் வன்னி அரசு மாற்ற நினைக்கிறார் என நெகிழ்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *