International
oi-Mani Singh S
தெஹ்ரான்: ஈரான் அமெரிக்கா இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்த நிலையில், நேற்று மாலை ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியதாகவும், ஈரானின் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழித்ததாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இதனால் கடும் கோபம் அடைந்த ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடன் அனைத்து வர்த்தக உறவுகளும் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
ஈரானுக்கும் – அமெரிக்காவும் இடையே ஏற்பட்டு இருந்த தற்காலிக ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியையும் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக ஈரான் கூறி வருகிறது. இது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்கு அவசர எச்சரிக்கை
ஈரான் சரண் அடைவதை தவிர வேறு வழியில்லை என்று டிரம்ப் எச்சரித்து வருகிறார். ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் மீண்டும் உக்கிரம் அடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, நேற்று மாலை ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கு செல்போன் மூலம் ஏவுகணை தாக்குதல் தொடர்பான அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், ஈரானின் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழித்ததாகவும் ஐக்கிய அரபு அமீரகம் கூறியது. முதல் ஏவுகணை கடல் எல்லைக்கு அப்பாலும், இரண்டாவது ஏவுகணை நாட்டின் கடல் எல்லை பகுதியிலும் இடை மறித்து அழிக்கப்பட்டதாக கூறியது. இந்த சம்பவத்தின் போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த சத்தம் கேட்டது.
அனைத்து வர்த்தக ஒப்பந்தமும் ரத்து
கடந்த மே மாதத்திற்கு பிறகு ஐக்கிய அரபு அமீரக பகுதிகளில் இப்படியான ஒரு நிகழ்வு ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும். ஆனால், இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று ஈரான் மறுத்து வருகிறது. இந்த பரபரபரப்புக்கு நடுவே, ஈரானுடனான அனைத்து வர்த்தக உறவுகள் மற்றும் வணிக பரிமாற்றங்களை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
மேலும் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க தயாராக உள்ளதாகவும் அமீரகம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. இந்த போர் தொடங்கிய போது அமெரிக்காவுக்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளை குறி வைத்து ஏவுகணை டிரோன்களை கொண்டு தாக்கியது. ஐக்கிய அரபு அமீரகம் மீதே அதிக அளவு தாக்குதல் நடத்தப்பட்டது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள், டிரோன்கள் அமீரகத்தை நோக்கி ஏவப்பட்டன.
91 டாலராக உயர்வு
இதனை தொடர்ந்து ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. எனினும் பின்னர் அது முறிந்தது. இந்த சூழலில்தான் தற்போது ஈரான் – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான வர்த்தக உறவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் மீண்டும் வலுத்து வரும் நிலையில், கச்சா எண்னெய் விலை எகிற தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 91 டாலராக உயர்ந்துள்ளது.

