International
oi-Nantha Kumar R
டெஹ்ரான்: ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 ம் தேதி கொல்லப்பட்டார். அவரது இறுதி சடங்கு வரும் 4ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. அழைப்பு விடுக்கப்பட்டும் பிரதமர் மோடி இதில் பங்கேற்காத நிலையில் நம் நாட்டின் சார்பில் 2 பேரை அனுப்பி வைக்கஉள்ளார். ஆனால் அவர்களின் ரேங்க் மிகக்குறைந்த அளவில் உள்ளது. இதனால் ஈரானை மொத்தமாக கைவிட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி போரை தொடங்கியது. போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவராக இருக்கும் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதன்பிறகு தொடர்ந்து போர் நடந்து வந்தது. தற்போது போர் நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்ட தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் போர் நின்றுள்ளது. இதனால் வரும் 4ம் தேதி முதல் ஜுலை 9 ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளது. இதில் ஈரான் தனது நட்பு நாடுகளின் தலைவர்களை பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்று ஈரான் விரும்புகிறார். ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியான், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார். ஆனால் பிரதமர் மோடி பங்கேற்கபோவது இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மோடிக்கு பதிலாக இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைசசர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பீகார் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இந்தியாவின் இந்த செயல் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. ஏனென்றால் இதற்கு முன்பு ஈரானின் முதல் உச்சபட்ச தலைவர் அயதுல்லா ரூகொல்லா கோமேனி கடந்த 1989 ம் ஆண்டில் காலமானார். அப்போது அவரது இறுதி சடங்கில் நம் நாட்டில் இருந்து அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிவி நரசிம்ம ராவ் சென்று பங்கேற்றார். பிறகு கடந்த 2024ம் ஆண்டில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவரது இறுதி சடங்கில் நம் நாட்டின் அப்போதைய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்றார்.
இப்போது அயதுல்லா அலி கமேனி 37 ஆண்டுகளாக ஈரானின் உச்சபட்ச தலைவராக இருந்து மறைந்த நிலையில் பிரதமர் மோடிக்கு அழைப்பு வந்தும் அவர் செல்லவில்லை. மாறாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மறஅறம் பீகார் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோரை அனுப்புகிறது. இவர்கள் 2 பேரின் அந்தஸ்து என்பது துணை ஜனாதிபதி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை விட குறைவாகும்.
இதுதான் தற்போது பேசும் பொருளாகி உள்ளது. இந்தியா – ஈரான் இடையே நல்லுறவு உள்ளது. ஒரு காலத்தில் ஈரானிடம் இருந்து கணிசமான அளவில் நம் நாடு கச்சா எண்ணெய்யை வாங்கி பயன்படுத்தியது. அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்த பிறகு தான் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நம்நாடு நிறுத்தியது. அதன்பிறகும் கூட பாகிஸ்தானை தவிர்த்து ஈரானின் சஹாபர் துறைமுகம் வழியாக கடல்வழிப்பாதையை அமைக்கும் திட்டத்தை இந்தியா முன்னெடுத்தது. அமெரிக்காவின் அழுத்தத்தால் இந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஈராக் உள்பட பிற நாடுகளிடம் இருந்து நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய் வர வேண்டும் என்றால் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் வந்தாக வேண்டும். இவை எல்லாம் சிறப்பாக நடக்க வேண்டும் என்றால் ஈரானின் ஆதரவு நமக்கு நிச்சயம் வேண்டும்.
ஆனால் தற்போது மறைந்த ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கிற்கு பிரதமர் மோடி புறக்கணிக்க உள்ளார். இந்தியாவுக்கு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நல்ல உறவு உள்ளது. இந்த நாடுகள் சேர்ந்து தான் அயதுல்லா அலி கமேனியை போட்டு தள்ளியது. இப்படி இருக்கும்போது அவரது இறுதி சடங்கில் பங்கேற்றால் அது இஸ்ரேல், அமெரிக்காவின் உறவை பாதிக்கலாம் என்பதால் இந்த முடிவை மோடி எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒருவரியில் கூற வேண்டும் என்றால் ஈரானை விட இஸ்ரேல், அமெரிக்கா உள்பட பிற மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவை பெற இந்தியா இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.
இதுபற்றி சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையேயான ஸ்ரேட்டிஜிக் விவகாரங்கள் பற்றி உன்னிப்பாக ஆராய்ந்து வரும் பிரம்மா செல்லானி கூறுகையில், ”கடந்த 2024ல் ஈரான் அிபர் இம்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அவரது இறுதி சடங்கில் இந்தியாவின் துணை ஜனாதிபதி பங்கேற்றார். இப்போது ஈரான் உச்சபட்ச தலைவர் என்பது மட்டுமின்றி உலகளவில் உள்ள ஜியா இஸ்லாமியர்களின் தலைவராக விளங்கிய அயதுல்லா அலி கமேனியின் கீழ்மட்ட அளவிலான பிரதிநிதிகளை பிரதமர் மோடி அரசு அனுப்புகிறார். இது ஈரான் போரில் அந்த நாட்டுக்கு எதிரான அதேவேளையில் பிற நாடுகளுக்கு ஆதரவான போக்கை தான் காட்டுகிறது. உயர்மட்ட அந்தஸ்தில் உள்ளவர்களை ஈரானுக்கு அனுப்பாமல் இருப்பதன் மூலம் இஸ்ரேல், அமெரிக்காவை பகைத்து கொள்வதை மோடி அரசு விரும்பவில்லை என்பது உறுதியாகி உள்ளது” என்றார்.
அதேபோல் மூத்த பத்திரிகையாளர் சபா நக்வி கூறுகையில், ”பாகிஸ்தான் தனது பிரதமரை அனுப்புவதாக கூறி உள்ளது. இதனால் நம் நாடு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழுவை அனுப்பி வைக்க வேண்டும். ஏனென்றால் ஈரான் உடனான உறவு நமக்கு ரொம்ப முக்கியம். மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை நமக்கு பிரச்சனையின்றி கிடைக்க வேண்டும் என்றால் ஈரானின் ஆதரவு நமக்கு மிகமிக தேவையாக உள்ளது. இதனால் அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கிற்கு அனுப்பப்பும் குழு விஷயத்தில் மறுபரிசீலைனை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.