அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த 17-ம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி ராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, ஹார்முஸ் ஜலசந்தியை கப்பல் போக்குவரத்துக்குத் திறக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டு சரக்குக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்றபோது ஈரான், அக்கப்பல் மீது தாக்குதல் நடத்தியது.

தாங்கள் வழிகாட்டும் ஈரான் கடலோரப் பகுதி வழியாகத்தான் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க வேண்டும் என ஈரான் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
எண்ணெய் கப்பல் மீது ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவ விமானங்கள் ஹார்முஸ் ஜலசந்தியிலும் அதன் அருகிலும் உள்ள பல இடங்களில் 10 ஈரானிய ராணுவ இலக்குகளைக் குறிவைத்ததாக அமெரிக்க மத்தியப் படை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும் ஈரான்- அமெரிக்க இடையேயான தாக்குதல்கள் தொடர்வதால் 2-வது நாளாகப் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருக்கும் பதிவில், “போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதற்காக, ஈரானின் ஏவுகணை, ட்ரோன்கள் மற்றும் கடலோர ரேடார் தளங்கள் மீது அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

ஈரான் தொடர்ந்து அமைதி ஒப்பந்தத்தை மீறினால், ஒரு கட்டத்திற்கு மேல் அமெரிக்காவும் பொறுமையாக இருக்காது.
ஏற்கனவே அமெரிக்கா தொடங்கிய ராணுவ நடவடிக்கையை முழுமையாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், ஈரான் என்ற நாடே இல்லாமல் போய்விடும்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.