“சந்தனக் காடு’ என அழைக்கப்படும் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயற்கையாகவே சந்தன மரங்கள் செழித்து வளரும் பகுதிகளாக உள்ளன.
இந்தக் காடுகளில் காணப்படும் சந்தன மரங்களுக்குச் சட்டவிரோத சந்தைகளில் கூடுதல் வரவேற்பு என்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் கடத்தல் கும்பல்கள் அத்துமீறி நுழைந்து சந்தன மரங்களைக் கடத்திச் செல்கின்றனர்.
வனத்துறையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டும் சந்தன மரக்கடத்தலைக் கட்டுப்படுத்த முடியாத நிலையே தொடர்கிறது.

இந்த நிலையில், அந்தியூர் பெண் வனச்சரகர் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தியூர், கிணத்தடி பகுதியில் 2 சந்தன மரங்களை வெட்டிய மர்ம நபர்கள், அதனைக் கடத்திச் செல்வதற்காகப் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
சுமார் 100 கிலோ எடையுள்ள இந்தச் சந்தன மரங்களை வெட்டிய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கோவிலூரைச் சேர்ந்த சடையன், பிரபு மற்றும் விளாங்குட்டையைச் சேர்ந்த ராசு என்கிற செங்காயன் ஆகிய மூன்று பேரும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
கடத்தலை முறியடித்த வனத்துறையினர், மூன்று பேர் மீதும் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரண்டு நபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ராசுவைத் தேடி வருகின்றனர். சந்தன மரக்கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.