ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸ்டில்டா, தானும் மாதம்பட்டி ரங்கராஜும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னுடைய குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் கூறியிருந்தார்.
பிறகு, தங்களுக்குள் நடந்த திருமணத்தை மறைக்க முயல்வதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஜாய் கிறிஸ்டில்டா, தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், மாதம்பட்டி ரங்கராஜிடமிருந்து ஜீவனாம்சம் வேண்டும் என்றும் கோரி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
நேற்றைய தினம் ஜாய் கிறிஸ்டில்டாவுக்கும் தனக்கும் பிறந்த மகன்தான் இவர் என்றும், தந்தையாக அத்தனை கடமைகளையும் தான் கவனித்துவருவதாகவும், மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருந்தார். தற்போது இது குறித்து ஜாய் கிறிஸ்டில்டா அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவர், “கண்ணீர், தூக்கமில்லாத இரவுகள், முடியாத கேள்விகள் மற்றும் ஒரு தாயால் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்த போராட்டங்களுக்குப் பிறகு இது நடந்திருக்கிறது. உலகிற்கு நான் காட்டிய ஒவ்வொரு சிரிப்புக்குப் பின்னாலும் ஆயிரம் துளிக் கண்ணீர் மறைந்திருந்தது.
எனது மகன், ஒவ்வொரு குழந்தையும் பெறத் தகுதியான அவனுக்கான சரியான அடையாளம் மற்றும் அங்கீகாரத்தை இறுதியாகப் பெற்றுவிட்டான். மக்கள் தலைப்புச் செய்திகளைப் பார்த்தார்கள். மக்கள் கருத்துகளைப் பார்த்தார்கள். மக்கள் சமூக வலைத்தளங்களைப் பார்த்தார்கள். ஆனால், அமைதியில் கதறி அழுத ஒரு தாயை அவர்கள் பார்க்கவில்லை.