
தமிழ்நாட்டின் நிதிநிலையை குறித்து முழுதகவலும் இன்று மாலை வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தவெக அரசு சார்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு அரசின் ஆட்சியில் நிதிநிலை, வரவு மற்றும் செலவு போன்ற முழு தகவலையும் மக்களிடம் எந்த வொரு ஒழிவு மறைவு இல்லாமல் உண்மைநிலையை வெளிப்படையாக வெளியிடுவது தான் வெள்ளை அறிக்கை.
தற்போது புதிய அரசு பதவியேற்ற நிலையில் முந்தைய அரசின் செயல்பாடுகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் ஆரம்ப முதல் கூறிவந்தார். குறிப்பாக, தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றதும், மூன்று கோப்புகளைக் கையெழுத்திட்டு உரையாற்றிய முதலமைச்சர் விஜய், முந்தைய திமுக ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி இருப்பதாகவும், தமிழக அரசின் கஜானாவை அவர்கள் காலி செய்துவிட்டுச் சென்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு திமுக சென்றதாக கூறிய அவர், எது எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என விரும்புகிறேன் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதக் காலம் ஆன நிலையில், வெள்ளை அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிதி அமைச்சர் மரிய வில்சன்.
அதாவது, தமிழ்நாடே எதிர்பார்த்துள்ள நிதிநிலை குறித்தான வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்றும், தற்போதைய நிதி நிலைமை, கடன் சுமை, முந்தைய ஆட்சிகளின் செலவினங்கள் மற்றும் வருவாய் மேலாண்மை ஆகியவற்றை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியப்படுத்துவதற்காக இந்த வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விளக்கம் கொடுத்தார்.
ஜூன் 18 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூடும் நிலையில், தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று மாலை 5.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.