Business
oi-Velmurugan P
டெல்லி: இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் 5ஜி நெட்வொர்க் உள்கட்டமைப்பு மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்காகப் பல லட்சம் கோடிகளை முதலீடு செய்துள்ளன. ஆனால் இந்த மூலதனச் செலவுகளை ஈடுகட்டவும், லாபத்தை ஈட்டவும் தற்போதைய கட்டணங்கள் போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 15 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபல சர்வதேச நிதி மற்றும் தரகு நிறுவனமான “நொமுரா” இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஒரு விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த ஆய்வு அறிக்கையில் இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்கள் 15 சதவீதம் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 15 சதவீதம் கட்டண சீரமைப்பு நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் நிகழலாம் என நொமுரா அமைப்பு தனது கணிப்பில் குறிப்பிட்டிருக்கிறது. லும் செல்போன், பிராட்பேண்ட் மற்றும் ஓ.டி.டி. உள்ளடக்கங்களை ஒன்றாக இணைத்து “பண்டில்” செய்து வழங்குவதால், கட்டணங்கள் உயர்ந்தாலும் வாடிக்கையாளர்கள் நெட்வொர்க்கைவிட்டு மாறுவது பாதியாக குறையும் என்று நொமுரா அமைப்பு கணிப்பில் கூறியுள்ளது.
இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் 5ஜி நெட்வொர்க் உள்கட்டமைப்பு மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்காகப் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்திருக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் லட்சம் கோடிக்கு மேல் செலவு செய்துள்ளன. இந்த பிரம்மாண்டமான மூலதனச் செலவுகளை ஈடுகட்டவும், லாபத்தை ஈட்டவும் தற்போதைய கட்டணங்கள் போதுமானதாக இல்லை. எனவேதான் இந்த கட்டண உயர்வுக்கு தயாராகிறார்கள்.
டெலிகாம் சந்தை ஜியோ, ஏர்டெல், வோடபோன் என 3 தனியார் நிறுவனங்களின் கைகளில் மட்டுமே சுருங்கியுள்ளது. இதனால் நிறுவனங்கள் விலையை உயர்த்தும்போது வாடிக்கையாளர்களுக்கு பெரிய மாற்று வழிகள் மக்களுக்கு இல்லை. அப்படி மாற வேண்டும் என்றால் பிஎஸ்என்எல்லுக்குத்தான் மாற வேண்டும்.
தற்போதைய நிலையில், இந்த 15 சதவீதம் கட்டண உயர்வு நிறுவனங்களின் லாபத்தை நிச்சயம் உயர்த்தும் என்றும், சாமானிய மக்களின் மாதாந்திர மொபைல் ரீசார்ஜ் செலவை ரூ.20 முதல் ரூ.40 வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலையில் 350 ரூபாய் செலவு செய்தால் தான் ஒரு மாதம் ஒருவர் செல்போனை இண்டர்நெட்டுடன் பயன்படுத்த முடியும். இண்டர்நெட் இல்லாத வாடிக்கையாளர்கள் கூட 200ரூபாய் மாதம் மாதம் ரீசார்ஜ்செய்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் இன்கம்மிங் கால் கூட வராது.
அதனால் கோடிக்கணக்கான மக்கள் ரீசார்ஜ் செய்கிறார்கள். இன்று மக்கள் போஸ்ட் பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு பெறுவது பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அத்துடன் ஒடிடி சேவைகளையும் சேர்த்தே வாங்குகிறார்கள். மாதம் குறைந்தது 1500 ரூபாய் என்கிற அளவிற்கு இந்த இணைய சேவை மற்றும் தொலை தொடர்பு திட்டங்கள் உள்ளன. இரண்டு பேர் கொண்ட குடும்பத்திற்கே இந்த செலவு ஆகிறது. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்கள் மூலம் பல லட்சம் கோடி வருமானத்தை ஏர்டெல், ஜியோ நிறுவனம் சம்பாதிக்கின்றன.

