“உதயநிதியை 'இளைய கலைஞர்' ஆக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்" – ஆர்.எஸ்.பாரதி

Spread the love

தஞ்சாவூரில் நடந்த காவிரி நீருக்கான ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “எல்லா ஆட்சியையும் மிஞ்சக்கூடிய வகையில், சர்வாதிகாரத்தின் உச்சத்தில் நின்று கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறார். சட்டமன்றம் கூடவிருக்கின்ற இந்த நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவரைைக் கைது செய்வது ஜனநாயக விரோதச் செயல்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

கொலைக் குற்றவாளியாக இருக்கக்கூடியவர்கள் கூட, ‘பாராளுமன்றம், சட்டமன்றம் நடக்கும் போது அதிலே கலந்து கொள்வதற்கு எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் கோரி, நீதிமன்ற அனுமதியோடு வந்து கலந்துகொண்ட வரலாற்றையெல்லாம் இந்திய ஜனநாயகத்தில் இந்த 75 ஆண்டு காலமாக நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், ‘ஜன நாயகன்’ என்ற படத்திலே நடித்தாரே தவிர, ஜனநாயகத்தைப் பற்றி ABC கூட தெரியாத ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவருடைய பேச்சைத் திரித்து, அதன் மூலம் கைது செய்திருக்கிறார்கள்.

காவிரி பிரச்னை குறித்து ஏறத்தாழ 40 நிமிடங்கள், இந்த அரசாங்கம் செய்யத் தவறியது என்ன, இந்தப் பிரச்னையை எப்படி அணுக வேண்டும், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி இருக்க வேண்டும் என்பன் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை, இந்த அரசின் மீது முன்வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் செய்ய வேண்டிய கடமையாக அவர் செய்தார்.

அந்த நேரத்தில், யாரோ ஒருத்தர் தண்ணீர் வரவில்லை என்ற வைத்தெரிச்சலில் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருத்தர் `திரிஷா வீட்டுக்குத் தண்ணீர் வருது, அவங்க வீட்டுக்கு மட்டும் வருது’ என்று கூட்டத்தில் கேட்டாங்க. `அங்கே மட்டும் வரும்’ என்று சொன்னார். அதில் என்ன தவறு இருக்கிறது? அது உலக மகா தவறா?

விஜய்
விஜய்

தண்ணீர் என்பது குடிக்கும் தண்ணீர், அந்தத் தண்ணீருக்கான விளக்கம் என்ன என்பதை நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம். ஆனால் இதில் என்ன தவறு இருக்கிறது? அதில் என்ன தவறான அர்த்தம் இருக்கிறது?

அப்படியே நான் வாதத்திற்காகக் கேட்கிறேன், திரிஷாவைப் பற்றிப் பேசினால் உடனே இவ்வளவு அவசரம் தேவையா? அந்த அம்மா இந்த நாட்டினுடைய பிரதமரா அல்லது முதலமைச்சரா? அந்த அம்மாவைத் தனிப்பட்ட முறையில் யாரும் ஒன்றும் பேசவில்லையே.

இதெல்லாம் அரசியலில் பக்குவப்பட்டு, போராட்டங்கள் நடத்தி, அரசியல் நடத்தி ஆட்சிக்கு வந்திருந்தால் அதெல்லாம் புரியும். ஜெயலலிதா காலத்தில் நாங்களெல்லாம் பேசியிருக்கிறோம், எடப்பாடி காலத்தில் பேசியிருக்கிறோம், எம்.ஜி.ஆர் காலத்தில் பேசியிருக்கிறோம். என் மீதே 16 வழக்குகள் ஜெயலலிதா காலத்தில் போட்டார்கள். ஆனால் ஒரு வழக்கில் கூட நான் கைது செய்யப்படவில்லை.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

தளபதி ஸ்டாலின் மீது 40 வழக்குகள், ஆனால் ஒரு வழக்கில் கூட கைது செய்யப்படவில்லை. ஆக, இதுபோல வழக்குகளில் கைது செய்வதே கிடையாது.

தஞ்சாவூரில் விவசாயிகள் எல்லாம் பட்டினியில் சாகிறார்கள். அதைப் பற்றி கவனிப்பதற்கு இந்த அரசாங்கத்திற்கு நேரமில்லை. ஒன்று மட்டும் சொல்கிறேன், எங்கள் உதயநிதி ஸ்டாலினை இன்றைக்கு ‘இளைய கலைஞர்’ ஆக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *