India
oi-Nantha Kumar R
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவை வீழ்த்த ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஓவைசி கூட்டணி வைக்க தயாராகி அகிலேஷ் யாதவின சமாஜ்வாதி கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது சாத்தியமாகும் பட்சத்தில் பாஜகவுக்கு புதிய தலைவலி ஏற்படும்.
உத்தர பிரதேசத்தில் 2017 ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இவர் முதலில் 2017 முதல் 2022 வரை முதல்வராக இருந்தார். அதன்பிறகு 2022 சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக வென்றதால் யோகி ஆதித்யாநாத் 2வது முறையாக முதல்வராக உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராக தொடங்கி உள்ளது. எப்படியாவது வென்று 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.
அதேவேளையில் பாஜகவை வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்பில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் செயல்பட்டு வருகின்றனர். நம் நாட்டிலேயே அதிகமான நாடாளுமன்ற தொகுதிகள் (மொத்தம் 80) கொண்ட மாநிலம் என்பதால் இங்கு செல்வாக்கு இருந்தால் எளிதாக மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும். இதனால் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான பணியை தொடங்கி உள்ளன.
இந்நிலையில் தான் ஏஐஎம்ஐஎம் கட்சியை சேர்ந்த அசாதுதீன் ஓவைசி, சமாஜ்வாதி கட்சிக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளார். இதுபற்றி ஓவைசி கூறியுள்ளதாவது:” உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவதை எங்களின் கட்சி விரும்பவில்லை. இதனால் நான் கூட்டணிக்கு தயாராக இருக்கிறேன். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இன்று நல்ல நாள்.
அதைவிட்டுவிட்டு தேர்தல் முடிந்து அழக்கூடாது. ஏனெ்னாறால் தேர்தல் முடிந்த பிறகு ஓவைசி கட்சியால் தான் தோல்வியை தழுவினோம் என்று கூறக்கூடாது. இதனால் நான் உங்களுடன் சேர்ந்து பாஜகவை எதிர்க்க தயாராக இருக்கிறேன்.எங்களின் தேர்தல் போட்டி என்பது நீதி மற்றும் கவுரவத்துக்கானது. இதனால் நாங்கள் வெறுமனே தோழமை என்று உட்கார மாட்டோம். அகிலேஷ் யாதவ் இருக்கையில் இருக்கும்போது நானும் அவர் முன்பு கால்மேல் கால் போட்டு இருந்து உரிமை, நீதி பற்றி பேசுவேன். ” என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் ஓவைசி, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். உத்தர பிரதேசத்தை எடுத்து கொண்டால் மொத்த மக்கள்தொகையில் 19 முதல் 23 சதவீதம் வரை இஸ்லாமியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சமாஜ்வாதி – காங்கிரஸ் – ஓவைசி கட்சிகளின் கூட்டணி அமைந்தால் இஸ்லாமியர்கள் ஓட்டுகளை அப்படியே இந்த கட்சிகளால் பெற முடியும்.
இருப்பினும் கடந்த 2022 சட்டசபை தேர்தலின்போது சமாஜ்வாதி, காங்கிரஸ், அசாதுதீன் ஓவைசி கட்சிகள் தனித்தனியாக கூட்டணி அமைத்த களமிறங்கின. இதனால் இஸ்லாமியர்களின் ஓட்டுகள் சிதறின. மொத்தம் 94 தொகுதிகளில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் க்சி போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோற்றதுது. மொத்தம் 0.49 சதவீத ஓட்டுகளை பெற்றது. ஓவைசி கூட்டணியில் ஜன் அதிகார் கட்சி இருந்தது. இந்த கட்சி 39 தொகுதிகளில் போட்டியிட்டு 0.19 சதவீத ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தது.
மேலும் பல தொகுதிகளில் ஓவைசியின் கட்சி வேட்பாளர்கள் பிரித்த இஸ்லாமியர்களின் ஓட்டுகள் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றியை பறித்தது. இந்நிலையில் தான் ஓவைசி தேர்தல் முடிவடைந்த பிறகு ஓவைசியால் பாதிக்கப்பட்டதாக கூறகூடாது என்று கூறி சமாஜ்வாதி கட்சிக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.
முன்னதாக உத்தர பிரதேசத்தில் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் (மெஜாரிட்டி) என்றால் 202 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது பாஜகவிற்கு 257 எம்எல்ஏக்களும், அதன் கூட்டணி கட்சிகளை சேர்த்தால் மொத்தம் 294 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
எதிர்க்கட்சியாக அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சிக்கு மொத்தம் 100 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 2 எம்எல்ஏக்களும் உள்ளனர். கடந்த முறை இருகட்சிகளும் தனித்து களமிறங்கிய நிலையில் இந்த முறை சேர்ந்து போட்டியிட வாய்ப்புள்ளது. இதுதவிர ஜேடிஎல் கட்சிக்கு 2 எம்ல்ஏக்களும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்எல்ஏக்களும் உள்ளனர். 4 இடங்கள் காலியாக உள்ளன.
இதற்கிடையே தான் அகிலேஷ் யாதவை, ஓவைசி கூட்டணிக்கு அழைத்ததை பாஜக விமர்சனம் செய்துள்ளது. ஓட்டு வங்கி அரசியலுக்கு ஓவைசி தயாராகிவிட்டார் என்று விமர்சனம் செய்துள்ளது.

