கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. அந்தக் கோவிலில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல்களும், 7 இடங்களில் தற்காலிக உண்டியல்களும் என 16 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 15 ம் தேதி இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதில் ஒரு உண்டியலை மட்டும் ஊழியர்கள் தனியாக எடுத்து வைத்து அதில் இருந்த பணத்தைத் திருடியுள்ளனர். இதைப் பார்த்த பக்தர் ஒருவர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாகப் புகார் அளித்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஒரு உண்டியலை எண்ணாமல் அதிலிருந்த 30 ஆயிரம் பணத்தை கோவிலில் பணிபுரியும் பாலசுப்பிரமணியன், சரவணன், பிரதீப் குமார், கோயில் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேர் கையாடல் செய்தது உறுதியானது.
இதனையடுத்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் புகாரின் பேரில் பூசாரி உட்பட 4 பேரையும் உக்கடம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், கோவில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட பாலசுப்பிமணியன், சரவணன், பிரதீப்குமார்,கிருஷ்ணராஜ் ஆகிய 4 பேரையும், பணம் திருடப்பட்டதைக் கண்டறியாமல் ஆஜாக்கிரதையாகச் செயல்பட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உஷா நந்தினி, கோவில் செயல் அலுவலர் குமார், சரக ஆய்வாளர்கள் ராம்குமார், உதயகுமார் ஆகிய 8 பேரையும் சஸ்பென்ட் செய்ய உத்தரவிட்டார். இதன் பேரில் 8 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.