பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவரது மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் பிரியப்போகிறார்கள் என்றும் அடிக்கடி செய்தி வெளியாகி வருகிறது.
தற்போது இயக்குநர் பரா கான், நடிகர் ரிதேஷ் தேஷ்முக் ஆகியோர் தொகுத்து வழங்கும் லாக் அப்: சச் யா சஸா ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் சுனிதா கலந்துகொண்டார்.
இந்தச் சீசனின் போட்டியாளர்களுள் ஒருவராகக் களமிறங்கியுள்ள சுனிதா அஹுஜா, நிகழ்ச்சியின் புதிய ஜெயிலர்களான நிகழ்ச்சியை நடத்தும் ஃபரா கான் மற்றும் ரிதேஷ் தேஷ்முக் முன்னிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதில் வைல்ட்கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த நடிகை ஷில்பா ஷிண்டே, கோவிந்தா குறித்து சுனிதா பேசிய கருத்துக்களை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றிப் பேசினார்.
சுனிதா எதையும் யோசிக்காமல் ஓப்பனாகப் பேசுவதால், மக்கள் அவரை சமூக வலைத்தளங்களில் “எதையும் யோசிக்காமல் பேசுபவர்’ என்று அழைக்கிறார்கள் என்று கூறினார்.

ஷில்பாவின் இந்தக் கருத்துக்கு சுனிதா உடனடியாகப் பதிலடி கொடுத்தார். ”எனது குடும்பத்தைப் பற்றி நீ பேசாதே. அவர் என் புருஷன். அவர் 50 திருமணம் மீறிய உறவு (Affairs) வைத்திருந்தாலும், உனக்கு என்ன நஷ்டம்? அவர் என் கணவர், நான் அவருடைய மனைவி.
மக்கள் என்னை விமர்சிப்பதற்கு முன்பாக, தனது சூழ்நிலையில் இருந்து யோசித்துப் பார்க்க வேண்டும். இது போன்ற ஒரு சூழ்நிலை உங்களுக்கு ஏற்படும் போதுதான், நான் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். இது என் வாழ்க்கை. நான் என்ன நினைக்கிறேனோ அதைத்தான் செய்வேன். அவர் என் கணவர்.
அவருக்கு 10 பெண்களுடன் திருமணம் மீறிய உறவு இருந்தாலும் சரி, நான் அவரை விட்டுப் பிரிய மாட்டேன். எனது கடைசி மூச்சு இருக்கும் வரை நான் அவரை நேசிப்பேன்.
அவர் என் கணவர். அவரைப் பற்றிப் பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை, நான்தான் அவருடைய மனைவி. கடந்த 36 ஆண்டுகளாகத் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். தனது கணவர் மிகவும் நல்லவர் மற்றும் குடும்பத்தின் மீது பற்றுள்ளவர்” என்றும் அவர் பேசினார்.
சுனிதாவின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து, சிலர் அவரது தீவிரமான அன்பைப் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில், திருமண வாழ்க்கையில் துரோகத்தை இவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவறான முன்னுதாரணம் என்று கூறி மற்றொரு தரப்பினர் அவரது கருத்தை விமர்சித்து வருகின்றனர்.