International
oi-Halley Karthik
காத்மாண்டு: நேபாள பெருவெள்ளம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் வெள்ளம் ஏற்படுத்திய இடிபாடுகளில் சிக்கியிருந்த 97 வயது மூதாட்டி பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்.
திரும்பும் பக்கம் எல்லாம் வெறும் சடலங்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில் மூதாட்டி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த மாதம், 26ம் தேதி திடீரென நேபாளத்தின் போட் கோஷி-திரிசூரி வழித்தடத்தில் ஏற்பட்ட வெள்ளம், வீடுகளையும், பள்ளிகளையும், சாலைகளையும் மொத்தமாக அடித்து சென்றது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மொத்தம் 8,900 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரு பகுதியினர் நுவாகோட் மாவட்டத்தில் கபிலாஷ் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த இல்லத்தில் வசித்து வந்த குணா மாயா போரா என்கிற 97 வயது மூதாட்டி, வெள்ளம் மற்றும் சேற்றில் சிக்கிக்கொண்டார். இதில் பிரச்சனை என்னவெனில், முதியோர் இல்லத்துக்கு போகும் அனைத்து சாலைகளும் வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிட்டது என்பதுதான். இருப்பினும் ஒரு வழியாக வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றுவிட்டனர். அங்கு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போதுதான் குணா பாட்டியை கண்டுபிடித்திருக்கிறார்கள். 8-9 மணி நேரமாக வெள்ளம் ஏற்படுத்திய இடிபாடுகளில் சிக்கிக்கொண்டிருந்த அந்த பாட்டி.. தலையை மட்டும் வெளியே நீட்டியவாறு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். தலையில் ஏற்பட்ட சிறிய அசைவை வைத்துதான் வீரர்கள் பாட்டியை கண்டுபிடித்தனர்.
ஆம்புலன்ஸ் வர முடியாத சூழல் இருந்ததால், கனரக எர்த்மூவர் இயந்திரங்கள் மூலம் வழி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அந்த வழியாக ஆம்புலன்ஸால் வரமுடியவில்லை. பின்னர் வேறு வழியின்றி பொக்லைன் பக்கெட்டில் வைத்து பாட்டியை பாதுகாப்பான இடத்திற்கு வீரர்கள் கொண்டு சென்றனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பாட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
காத்மாண்டுவின் பீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாட்டிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு பெரிய அளவில் எந்த காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. தற்போது பாட்டி நலமாக இருப்பதாக அவரது பேரன் ராசிக் போரா தெரிவித்திருக்கிறார். 97 வயது பாட்டி மட்டுமின்றி சப்யா முனகாமி மற்றும் காவ்யா முனகாமி என்ற இரண்டு வயதுடைய 2 பெண் குழந்தைகளும் வெள்ள பாதிப்பிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர்.
வெறும் சடலங்களை மட்டும் மீட்டுக்கொண்டிருந்த மீட்பு படையினருக்கு, 97 வயது பாட்டியை உயிருடன் மீட்டது மிகுந்த மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.