வெற்றி என்பது வெறும் மதிப்பெண்களில் மட்டுமல்ல, சமூகத்தின் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டு, தளராத மனதுடன் தொடர்ந்து முன்னேறுவதிலும் உள்ளது.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம், உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம். உருவக்கேலிகளைத் தாண்டி கல்வியில் மாபெரும் சாதனை படைத்து, அனைவரின் நெஞ்சங்களிலும் நிறைந்துள்ளார்.
2024-ம் ஆண்டில், உத்தரப் பிரதேச மாநில 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பிராச்சி நிகம் 600-க்கு 591 மதிப்பெண்கள் (98.50%) பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
இந்தச் செய்தி வெளியாகி அவரது புகைப்படம் இணையத்தில் வைரலானபோது, பலர் அவரைப் பாராட்டினாலும், இணையவாசிகளில் ஒரு பகுதியினர் அவரது முகத்தில் இருந்த முடிகளை வைத்து மிகவும் கீழ்த்தரமாக உருவக்கேலி செய்தனர்.
ஒரு மாபெரும் வெற்றியைக் கொண்டாட வேண்டிய அந்தத் தருணத்தில், சமூக வலைத்தளங்கள் அவரைத் தேவையில்லாமல் விமர்சித்தன.

விமர்சனங்களுக்கு பதிலடி
அந்தச் சிறு வயதிலேயே பிராச்சி நிகம் காட்டிய முதிர்ச்சியும் தைரியமும் பலரையும் வியக்க வைத்தது. விமர்சனங்களால் சோர்வடையாத அவர், “என் முகம் எப்படி இருக்கிறது என்பது முக்கியமல்ல, என் மதிப்பெண்கள்தான் முக்கியம். என்னை இறைவன் எப்படிப் படைத்துள்ளானோ அப்படியே நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன்.
சாணக்கியர் கூட அவரது தோற்றத்திற்காக விமர்சிக்கப்பட்டார், ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. அவரைப் போலவே நானும் என் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவேன்” என்று அழகாகப் பதிலளித்தார்.
அவரது இந்தத் தன்னம்பிக்கை பேச்சு, விமர்சித்தவர்களை வெட்கித் தலைகுனிய வைத்ததுடன், சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் ஆதரவையும் பெற்றுத் தந்தது.