Tamilnadu
oi-Vishnupriya R
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவனை கொல்ல செயற்கையான கூட்ட நெரிசல் ஏற்படுத்தப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், கள்ளக்குறிச்சி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
எஸ்பி ஷஹ்னாஸிடம் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ராஜா உள்ளிட்டோர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: விசிக தலைவர் திருமாவளவன் எம்பியின் பிறந்தநாளையொட்டி அவரது தலைமையில் கடந்த 17ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் தமிழ் தேசிய மாநாடு நடந்தது.

அந்த மாநாட்டு மேடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது தலைவர் திருமாவளவன் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் தனது உரையை 30 நிமிடங்களுக்குள் முடித்துவிட்டு மேடையை விட்டு வெளியேறும் போது திருமாவளவன் முன்னே இருந்த ஒருவர் மாநாட்டு மேடையை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில் செயல்பட்டார்.
அதே சமயம் திருமாவளவனுக்கு பின்னால் இருந்த ஒருவர் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், இடுப்பிற்கு கீழ் கால் முட்டிக்கு பின்புறம் திருமாவின் மீது முகம் தெரியாத அந்த நபர் அவரது கால்முட்டியால் பலமுறை இடித்து தாக்கும் செயலும் அந்த நபரின் வயிற்றால் முட்டித் தள்ளும் செயலும் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
அவ்வாறு திருமாவளவனின் பின்புறத்தில் காலில் தாக்குவது எங்கள் தலைவரை தடுமாறி கீழே விழ வைத்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு செய்தார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதை பார்க்கும் போது கரூர் கூட் நெரிசல் விபத்தை மாடலாக வைத்து யாரோ திருமாவளவனை திட்டமிட்டு கொலை செய்ய செயற்கையான கூட்ட நெரிசலை மேடையின் மீது உருவாக்கியதால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததா என தெரியவில்லை. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து திருமாவளவன் கூறியிருப்பதாவது: கரூரில் தவெக கூட்டத்தில் கூட்ட நெரிசலால் சோகமான விபத்து நடந்தது போல் இந்த மாநாட்டிலும் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடக் கூடாது என தீவிரமான பதற்றமும் கவலைக்குளயும் எனக்குள் இருந்ததால் மாநாட்டை விரைந்து முடித்துக் கொண்டேன் என கூறியிருந்தார்.