“எங்களுடன் வந்து பணியாற்றுங்கள்" – இந்திய இளைஞருக்கு நெதர்லாந்து நிறுவனம் அழைப்பு; பின்னணி என்ன?

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திர சிங் சவுத்ரி (21). இணைய உலகில் ‘பிட்டு தபாஹி’ என்று பிரபலமாக அறியப்படும் இவர், தனது பகுதியில் கடுமையாக மாசுபடுத்தப்பட்டிருந்த அஜ்னார் நதியை மீட்டெடுக்கத் தனி ஆளாகக் களமிறங்கினார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்ட பிட்டு தபாஹி, ஆற்றில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாசிகள் மற்றும் பிற குப்பைகளை அகற்றி நதியை முற்றிலும் தூய்மைப்படுத்தினார். இதற்கு அவர் இதுவரை சுமார் ரூ.30,000 வரை சொந்தமாகச் செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சுரேந்திர சிங் சவுத்ரி
சுரேந்திர சிங் சவுத்ரி

இவரது இந்த அசாத்திய முயற்சியைப் பாராட்டி, ஆற்றுப்பாதையின் ‘முன்னர் மற்றும் பின்னர்’ (Before and After) புகைப்படங்களை எக்ஸ் (ட்விட்டர்) பயனர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்தத் பதிவு நெதர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் ‘தி ஓஷன் கிளீன்அப்’ (The Ocean Cleanup) தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான போயன் ஸ்லாட் (Boyan Slat)-ன் கவனத்தை ஈர்த்தது.

உலகளாவிய அளவில் சமுத்திரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வரும் போயன் ஸ்லாட், அந்தப் பதிவைப் பார்த்து `எங்கள் நிறுவனத்தில் வந்து பணியாற்றுங்கள்’ என நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

டச்சு தொழில்முனைவோரான போயன் ஸ்லாட்டின் இந்த அழைப்பு சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளானதுடன், பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

போயன் ஸ்லாட்
போயன் ஸ்லாட்

கடந்த மார்ச் மாதத்தில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் பிட்டு தபாஹியின் சேவையைப் பாராட்டியிருந்தார். சமூக வலைத்தளப் புகழுக்காகவே இவர் நதியைச் சுத்தம் செய்வதாக விமர்சனங்கள் எழுந்தபோதிலும், “லைக்குகளுக்கான ஆசை நன்மையான காரியத்திற்கு வழிவகுக்குமானால் அது வரவேற்கத்தக்கதே” எனக் கூறி, அவரைத் தனது ‘திங்கட்கிழமை உத்வேகமாக’ (Monday Motivation) ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *