International
oi-Halley Karthik
பாங்காக்: தாய்லாந்து காடுகளில் விஞ்ஞானிகள் புதியதாக ஒரு பூவை கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த பூவுக்கு கிளையும் கிடையாது, இலையும் கிடையாது. அவ்வளவு ஏங்க.. இந்த பூ பூக்கும் செடி பச்சையாக கூட இருக்காது என்பதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
தாவரங்கள் பச்சையாக இருக்க காரணம் ஒளிச்சேர்க்கை செய்யதான். ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்கள் தங்களுக்கு தேவையான சக்தியை பெறுகின்றன. சரியாக சொல்வதெனில், மண்ணில் தாவரங்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. காற்றில் கார்பன் டை ஆக்சைடு இருக்கும். இவை இரண்டையும் ஆற்றலாக மாற்ற வேண்டும் எனில், சூரிய ஒளிதேவை. அதற்கு தாவரங்கள் பச்சையாக இருக்க வேண்டும்.

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த சாத்தான் பூ முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில்தான் இருக்கிறது. எனவே இதனால் ஒளிச்சேர்க்கை செய்ய முடியாது. அதற்கு பதில், தனது ஊட்டச்சத்துக்காக மண்ணுக்கு அடியில் இருக்கும் காளான்கள்/பூஞ்சைகளை நம்பிதான் இருக்கிறது. இத்தகைய வாழ்க்கை முறைக்கு ‘மைகோஹெட்டிரோபி’ என்று பெயர்.
இந்த வகை செடிகள் மேற்கு தாய்லாந்தில் உள்ள தொங் பா பூம் தேசிய பூங்காவில், சுமார் 950-970 மீ உயரத்தில் உள்ள மழை காடுகளில் இலை சருகுகளுக்கு அடியில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த பூ பெரும்பாலும் கருப்பு நிறத்திலும், வெளிப்புறத்தில் சிவப்பு-ஆரஞ்சு நிற சதைபற்றுள்ள அமைப்புடன் இருக்கிறது. இதன் உச்சியில் ஒரு குவிமாடம் போன்ற அமைப்பும், அதன் மேல் மூன்று மெல்லிய கொம்புகள் போன்ற நீட்சிகளும் உள்ளன. இதுவே இதற்கு சாத்தான் பூ என்று பெயர் வர காரணமாகும். என்னதான் பெயர் சாத்தான் என்று இருந்தாலும்.. யாருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத பூ இது.
தற்போது வரை, இந்த தாவரத்தின் ஒரே ஒரு இனம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கால்பந்து மைதானத்தை விட சிறி பரப்பளவில் 50க்கும் குறைவான தாவரங்களே தாய்லாந்து மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் இது சர்வதேச இயற்கை பாதுகாப்பு பட்டியலில் மிகவும் ஆபத்தான அழிவின் விளிம்பில் உள்ள தவரமாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. மரபணு சோதனைகள் மூலமாக, இது ஒரு தனித்துவமான தாவர இனம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கூடுதல் தகவல்கள்
இந்த உலகில் நாம் இன்னும் 80% உயிர்களை கண்டுபிடிக்கவில்லை. நமக்கு தெரிந்தது எல்லாம் வெறும் 20% உயிர்தான். நாம் பார்க்கும் நாய், ஆடு, மாடு, மரங்கள், களை செடிகள் இதில் 90% உயிர்களை கண்டுபிடித்துவிட்டோம். ஆனால், பூச்சிகள் உலகில் நமக்கு A,B,C,D கூட தெரியாது. பூஞ்சைகள் உலகில்.. சுத்தம்! ஒன்றுமே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.