சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, “களம் வேறு விதமாக இருக்கிறது. பிரிந்தவர்களை ஒன்றிணைத்து தேர்தலைச் சந்தியுங்கள்…’ என்று அமித் ஷா சொன்ன ஆலோசனையை எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. ‘150 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெற்றுவிடுவோம்’ என்று தனக்கு வந்த ரிப்போர்ட்டை ஆதாரமாகக் காட்டினார் எடப்பாடி.
ஆனால், எதிர்க்கட்சி அந்தஸ்த்தைக்கூட அ.தி.மு.க-வால் பெற முடியவில்லை. 27 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரேயொரு தொகுதியில் மட்டும்தான் பா.ஜ.க-வால் வெற்றிப்பெற முடிந்தது. இதையெல்லாம் அமித் ஷா துளியும் ரசிக்கவில்லை.
சில வாரங்களுக்கு முன்னர் டெல்லி சென்றிருந்த வேலுமணி தரப்பினர், தமிழக அரசியல் சூழல் குறித்து அமித் ஷாவுடனும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடனும் விவாதித்திருக்கிறார்கள். ‘பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக்கப்பட வேண்டும். பிரிந்திருக்கும் சசிகலாவையும் டி.டி.வி.தினகரனையும் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். தங்களின் கோரிக்கையை ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை என்பதையும் டெல்லிக்கு தெளிவுப்படுத்தினர்.
அப்படியான சூழலில்தான், திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்வதற்காக சமீபத்தில் சென்னை வந்தார் அமித் ஷா. அவரை விமானநிலையத்தில் எடப்பாடி பழனிசாமி வரவேற்றபோது, முகம் கொடுத்துப் பேசவில்லை. ‘கோவளத்தில் சந்திக்கும்போது விரிவாகப் பேசலாம்’ என்றுவிட்டு நகர்ந்துவிட்டார். இந்தநிலையில்தான், கோவளத்தில் எடப்பாடி – அமித் ஷா சந்திப்பு நடைபெறப் போகிறது. அ.தி.மு.க-வின் எதிர்காலம் குறித்து விரிவாக எடப்பாடியுடன் பேசவிருக்கிறார் அமித் ஷா.