எடப்பாடி: "குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்கு" – சுயேச்சைக்கு விஜய் ஆதரவு

Spread the love

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் த.வெ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்த அருண் குமாரின் வேட்புமனு தள்ளுபடியானது. பின்னணி குறித்து பல்வேறு சர்ச்சை தகவல்கள் வெளியாகி வருகின்றன. எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் விசில் சின்னம் இல்லை என்பது அக்கட்சியின் தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் வேட்பாளர் பிரேம்குமாரை மனதார ஆதரிப்பதாக த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர். நம்முடைய சகோதரர். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் பிரேம்குமார் அவர்களை, மனதளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12- ல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.

எடப்பாடி சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு

நம் குடும்பத்தைச் சேர்ந்த அவரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும் தோழர்களையும் எடப்பாடி தொகுதி மக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை முடக்கி, குறுக்கு வழியில் வெற்றியடைய முயன்றவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டும் விதத்தில் இவரது வெற்றி அமையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *