Tamilnadu
oi-Vignesh Selvaraj
சென்னை: தருமபுரி மண்டல நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான அரிமா செந்தில்நாதனை நீக்கக் கோரி கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அதுதொடர்பாக சீமான் கோபமாகப் பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மண்டல நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அரிமா செந்தில்நாதனை நீக்கக் கோரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் மற்றும் சீமானின் எதிர்வினை தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரிமா செந்தில்நாதனை நீக்குமாறு தருமபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சீமானுக்கு நெருக்கடி கொடுப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தங்கள் தொகுதிக்குள் வரக்கூடாது என்றும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிர்வாகிகளின் தொடர் அழுத்தம் மற்றும் எதிர்ப்பால் சீமான் கோபமடைந்து பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நானாவது உங்க தொகுதிக்குள் வரலாமா? தலைமை சொல்லும் நிர்வாகி உங்க தொகுதிக்குள் வரக்கூடாது என்றால் நானும் வரக்கூடாதா? நாளை என்னையே விலகச் சொல்வீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “போர்க்கொடி தூக்குபவர்கள் அப்படியே வேறு ஏதாவது கட்சியில் போய் சேர்ந்துவிட வேண்டியதுதானே? உங்கள் பேச்சைக் கேட்கும் கட்சியில் போய் சேர்ந்து விடுங்கள். நாதகவில் கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடக்க வேண்டும். கட்சிக்காக ஒழுங்காக வேலை செய்திருந்தால் இன்னும் வளர்ந்திருப்போம். இஷ்டம் இருந்தால் இருங்க, இல்லையென்றால் எந்தக் கட்சியில் வேண்டுமோ சேர்ந்து கொள்ளுங்கள்” எனப் பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தருமபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் கண்டிப்புடன் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் நாம் தமிழர் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.